இந்தியாவிற்கு இண்டர்நெட்-ஐ கொண்டு வந்த பெருமை பெற்றிருக்கும் விதேஷ் சன்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் கடும் நிதிநெருக்கடியால் சிக்கித்தவித்து வந்த நிலையில் டாடா குழுமம் இந்நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றிப் பிப்ரவரி 2008ல் டாடா கம்யூனிகேஷன்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்து நிறுவனத்தையும், அதன் வர்த்தகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தது.
டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மொத்த கட்டுப்பாடும் டாடா கையில் இருந்தாலும், இந்நிறுவனத்தில் இன்னும் மத்திய அரசு சுமார் 26.12 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்த 26.12 சதவீத பங்குகளை விற்பனை செய்துவிட்டு மொத்தமாக டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள மத்திய அரசு.
26.12 சதவீத பங்கு விற்பனை
மத்திய அரசிடம் இருக்கும் நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்டும் இலக்கை அடைய முடியாத நிலையில், தற்போது DIPAM அமைப்பு டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 26.12 சதவீத பங்குகளின் ஒரு பகுதியை டாடா குழுமத்திற்கும், ஒரு பகுதியை ஆஃபர் பார் சேல் பிரிவில் விற்பனை செய்து சுமார் 8000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
DIPAM அமைப்பு
மேலும் இந்தப் பங்கு விற்பனையை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் 16 சதவீத பங்குகளை ஆபர் பார் சேல் பிரிவில் விற்பனை செய்ய DIPAM அமைப்பு வர்த்தக வங்கிகள், தரகு நிறுவனங்களிடம் விருப்ப விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கப் பிப்ரவரி 3ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள பங்குகளை டாடா குழுமம் வாங்க உள்ளது.
டாடா கம்யூனிகேஷன்ஸ் லாபம்
டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபமாக 309 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 4.28 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் 2020 மார்ச் லாக்டவுன் அறிவிப்பில் இருந்து சுமார் 430 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்கு மதிப்பு
மத்திய அரசின் பங்கு விற்பனை அறிவிப்பைத் தொடர்ந்து டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 6.66 சதவீதம் சரிந்து 1,129.05 ரூபாயில் இருந்து 1,053.80 ரூபாய்க்குச் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களும், இந்நிறுவனத்தின் பங்கு உரிமையாளர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
2.1 லட்சம் கோடி இலக்கு
மத்திய அரசின் 2.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திரட்டும் திட்டத்தில் இதுவரை 15,220 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டு உள்ளது. DIPAM அமைப்பின் இரு முக்கியத் திட்டங்களான ஏர் இந்தியா மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களின் பங்கு விற்பனை அடுத்த நிதியாண்டுக்கு ஒத்திவைத்துள்ள நிலையில் இலக்கை அடையத் தவறியுள்ளது.