அதிக விகிதத்தில் எத்தனால் மற்றும் தாவர எண்ணெயின் கூறுகளை பெட்ரோல் மற்றும் டீசலுடன் கலப்பதை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எத்தனால் கலந்த எரிபொருட்களுக்கான கலால் வரி விலக்குகளை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் கச்சா எண்ணெயில் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசலை விட மிகக்குறைந்த விலையில் எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
நாட்டில் எத்தனால் கலந்த எரிபொருளை ஊக்குவிக்க, மத்திய அரசு பெரிய நிவாரணத்திற்கு தயாராகி வருகிறது. எத்தனால் கலந்த பெட்ரோல் மீது 12% மற்றும் 15% கலால் வரிச் சலுகையை அரசு வழங்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் - டீசல் விலை
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை இந்தியாவை மிகவும் மோசமாக ஒரு புறம் பாதித்துள்ள நிலையில் மறுபுறம் இந்திய சந்தையில் பெட்ரோல் விலை உச்சத்தில் உள்ளது.
வரிச்சலுகை
எனவே 2025-26ஆம் ஆண்டிற்குள் அரசாங்கம் எரிபொருளின் விலையை 20% குறைக்கும் இலக்கை அடையும் வகையில் எத்தனால் கலக்கும் பணியை முடுக்கி விட உள்ளது. இதன் கீழ் 12% மற்றும் 15% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு அரசு கலால் வரி சலுகை அளிக்கலாம் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பயோடீசலுடன் கலந்த அதிவேக டீசலுக்கும் கலால் வரிச் சலுகை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலக்கு
ஏற்கனவே நிர்ணயித்த இலக்கை விட ஐந்து மாதங்களுக்கு முன்பே 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை இந்தியா சமீபத்தில் அடைந்தது. இப்போது அடுத்த இலக்கு 2025-26ஆம் ஆண்டிற்குள் 20% கலவையாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எத்தனால் கலப்பால் சேமிப்பு
பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பதால், சுமார் 41,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை இந்தியா சேமித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால், இந்தியா ரூபாய் மதிப்பு சரிவை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் அன்னியச் செலாவணி வெளியேறுவதை தடுப்பதும் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
கலால் வரி
மே மாதம், எரிபொருளின் சில்லறை விலையை குறைக்க அரசாங்கம் கலால் வரியை குறைத்தது. அரசின் முயற்சியால் பெட்ரோல் விலையில் ரூ.9 வரை குறைந்தது. முன்னதாக நவம்பர் மாதமும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அரசு குறைத்தது. நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்காக உள்ளூர் வரியை இதே போன்று குறைக்கும் நடவடிக்கை பல மாநிலங்களில் எடுக்கப்பட்டன.
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரி விதித்தது. ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா லிமிடெட் போன்ற நிறுவனங்களால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் ஏடிஎஃப் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு 13 ரூபாயும் வரி விதித்துள்ளதாக நிதியமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு ரூ.67,425 கோடி வருவாய்
மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ரூ.23,250 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் மற்றும் தனியார் நிறுவனமான வேதாந்தா லிமிடெட்டின் கெய்ர்ன் ஆயில் & கேஸ் ஆகியவற்றின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் உள்நாட்டு உற்பத்தி 29 மில்லியன் டன்கள் ஆகியவற்றின் மீது வரி விதிப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.67,425 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.