வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடர்ந்து எல்ஐசி ஊழியர்களும் சில வாரங்களுக்கு முன்பு போராட்டத்தில் இறங்கினர், மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தை ஐபிஓ வெளியிடுவதன் மூலம் அதிகளவிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஊழியர்களின் போராட்டம் முக்கியப் பிரச்சனையாக அரசுக்கு விளங்கியது.
இதைத் தொடர்ந்து எல்ஐசி ஊழியர்கள் அமைப்பு மற்றும் அரசு செய்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊழியர்கள் அமைப்பின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டு உள்ளதால் எல்ஐசி ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
16 சதவீத ஊதிய உயர்வு
எல்ஐசி ஊழியர்கள் அமைப்பு மற்றும் அரசு மத்தியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 15 முதல் 16 சதவீத ஊதிய உயர்வு மற்றும் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை ஆகிய முக்கியக் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு முழுமையாக ஒப்புதல் அளித்துள்ளது. இதோடு எல்ஐசி ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள இந்தச் சம்பள உயர்வு, வங்கி ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்படும் வேளையில் அளிப்பதாக அரசு உறுதியளித்துள்ளது.
எல்ஐசி ஊழியர்கள்
வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வங்கி யூனியன் மற்றும் இந்திய வங்கி அசோசியேஷன் ஆகிய தரப்புகள் மத்தியில் நடக்கும் ஒப்பந்தங்கள் வாயிலாக அளிக்கப்பட உள்ளது. இதேபோல் அரசு எல்ஐசி ஊழியர்களுக்குச் சம்பள கணக்கீடு மற்றும் இறுதி சம்பள உயர்வை முடிவு செய்த பின்பு அரசு ஆணை வெளியிட்டு பின்பு சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்படும்.
25 சதவீத சம்பளம் உயர்வு
இதுமட்டும் அல்லாமல் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில் 6,352 புள்ளிகள் கிராக்கிபடி 100 சதவீதம் முழுமையாக அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள காரணத்தால் எல்ஐசி ஊழியர்கள் தோராயமாகச் சுமார் 25 சதவீதம் அளவிலான சம்பள உயர்வைப் பெற உள்ளனர்.
10 சதவீத தள்ளுபடியில் எல்ஐசி பங்குகள்
எல்ஐசி நிறுவனம் ஐபிஓ-விற்கு தயாராகும் நிலையில், இந்நிறுவனம் பட்டியலிடும்போது எல்ஐசி ஊழியர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியில் பங்குகளை வழங்கப்படும் எனவும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள சம்பள உயர்வு மற்றும் 5 நாள் வேலை என்பது ஜாக்பாட் தான்.
1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்கள்
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள சம்பள உயர்வு எல்ஐசி நிறுவனத்தின் 1.14 லட்சம் ஊழியர்களுக்குப் பொருந்தும் காரணத்தால் இந்நிறுவனம் சம்பளத்திற்காகச் செலவு செய்யும் தொகை 2,700 கோடி ரூபாயாக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.