ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட அனைத்துப் பொதுத்துறை வங்கி ஊழியர்களும் இணைந்து நாடு முழுவதும் வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு மற்றும் வாரம் 5 நாள் வேலை எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் போராட்டத்தை வங்கி ஊழியர்கள் வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எவ்விதமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இந்நிலையில் போராட்டம் நிச்சயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தை தோல்வி
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான அமைப்பு இந்திய வங்கிகள் அமைப்புடன் சம்பள உயர்வு மற்றும் இதர சில பிரச்சனைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட நாட்டில் 9 பெரிய வங்கி ஊழியர்கள் அமைப்புகள் இணைந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாகத் தெரிகிறது.
பட்ஜெட் நாள்
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள ஜனவரி 31ஆம் தேதியன்று பொருளாதார ஆய்வு அறிக்கையும், பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 1ஆம் தேதி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் வங்கி கட்டாயம் இயங்கி வேண்டிய நாள், ஆனாலும் வங்கி ஊழியர்கள் பட்ஜெட் நாளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
முக்கியக் கோரிக்கைகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர்கள் அமைப்பு 4 முக்கியமான கோரிக்கைகளை IBA அமைப்பின் முன் முன்வைத்துள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் 12.25 சதவீத சம்பள உயர்வு, மத்திய அரசு கையில் எடுத்துள்ள வங்கி இணைப்புத் திட்டத்தில் வங்கி இணைக்கப்படும் போது அளிக்கப்படும் சிறப்புக் கொடுப்பனவு தொகையை அடிப்படை சம்பளத்தில் இணைப்பு மற்றும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் கட்டாயம் 5 நாள் வேலைநாள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இதை IBA அமைப்பு ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
9 வங்கி ஊழியர்கள் அமைப்புகள்
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடு முழுவதும் நடக்கும் போராட்டத்தில் இணையும் வங்கி அணைப்புகள்.