2020ல் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அதிகமானோர் வர்த்தகத்தையும் வேலைவாய்ப்புகளையும் இழந்த காரணத்தால் மத்திய அரசு 6 மாத வட்டி சலுகை அளித்தது.
இந்த 6 மாத வட்டி சலுகை குறித்துச் சுப்ரீம் கோர்ட்-ல் தொடுக்கப்பட்ட வழக்கில் கடன் சலுகை பெற்ற கடனுக்கான கூட்டு வட்டியும் (Compound Interest) தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு 1,800 முதல் 2000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் பாதிப்பு அடைந்துள்ளது.
இதன் வாயிலாக 2020-21ஆம் ஆண்டில் 6 மாத காலத்திற்குக் கடன் வாங்கிய அனைவருக்கும் கூட்டு வட்டி சலுகை அளிக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு சுமார் 5,500 கோடி ரூபாய் அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் வங்கி நிர்வாகங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் படி முதல் 3 மாத கடன் சலுகையின் போது கடன் வாங்கியவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் கடன் சலுகை பெற்றனர், இது 6 மாத முடிவில் 40 சதவீதமாகக் குறைந்தது. இதுவே கார்ப்பரேட் கடனில் பிரிவில் 25 சதவீத கடனாளர்கள் 6 மாத சலுகை பெற்றனர்.
ரிசர்வ் வங்கி மார்ச் 27ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மார்ச் 1 முதல் மே 31, 2020 வரையில் 3 மாத கடன் சலுகை அளித்தது. ஆனால் கொரோனா தொற்றுக் குறையாமல் தொடர்ந்து அதிகளவிலான பாதிப்பை உருவாக்கிய காரணத்தால் இந்தக் கடன் சலுகை ஆகஸ்ட் 31 வரையில் நீட்டிக்கப்பட்டது.
இந்த 6 மாத கடன் சலுகை அளிக்கப்படுவதில் வங்கிகள் மத்தியில் பல பிரச்சனைகள் இருந்த நிலையில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன் வாயிலாகச் சுப்ரீம் கோர்ட் கடன் சலுகை பெற்றவர்கள் 6 மாதத்திற்கு முழுமையாகச் சலுகை எவ்விதமான கூட்டு வட்டியும் இல்லாமல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.