இந்தியாவில் இன்னும் பாஸ்ட் டேக் பிரச்சனையே முழுவதுமாக முடியாத நிலையில் அடுத்த அதிரடி திட்டத்தைத் தீட்ட துவங்கியுள்ளது மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம். சமீபத்தில் இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களும் பாஸ்ட் டேக் பெற வேண்டும் கட்டணம் அனைத்தும் டோல் கேட்-ல் எலக்ட்ரானிக் முறையில் வசூலிக்கப்படும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இதில் பல்வேறு பிரச்சனைகளைத் தினம்தோறும் வாகனம் ஒட்டுபவர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தற்போது ஆளில்லா டோல் கேட் அமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஆளில்லா டோல் கேட்
தற்போது அனைத்து டோல் கேட்களிலும் மனிதர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாஸ்ட் டேக் முறை வந்த பின்பு இது 50 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில் இதை 100 சதவீதமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது நாடு முழுவதும் இருக்கும் டோல் பிளாசா-க்களில் பணத்தை மின்னணு முறையில் வசூல் செய்யும் வகையில் டோல் கேட் அனைத்தையும் electronic toll collection (ETC)ஆக மாற்றி நாடு முழுவதும் ஓரே கட்டணத்தை அமலாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக இத்துறையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள்
மத்திய சாலை போக்குவரத்துத் துறை தற்போது electronic toll collection (ETC) முறை இயல்பு நிலைக்கு வந்த பின்பு 100 சதவீதம் electronic toll collection (ETC)ஆக மாற்ற முயற்சித்து வருகிறது. 100 சதவீதம் பாஸ்ட் டேக் மூலம் கட்டணம் செலுத்தப்படும் போதும் கட்டண வசூலில் தெளிவு கிடைக்கும், இதனால் இத்துறையில் புதிய முதலீட்டாளர்கள் வருவார்கள்.
இப்புதிய முதலீட்டாளர்களால் நாடு முழுவதும் பல புதிய திட்டங்களை மிகவும் வேகமாகச் செயல்படுத்தவும் முடியும்.
நிலையான கட்டணம்
மத்திய அமைச்சகத்தின் இப்புதிய திட்டத்தில் டோல் கட்டணத்தை நாடு முழுவதும் மறுசீரமைப்பு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் டோல் கட்டண வசூல் கொள்கை உருவாக்கி 10 வருடத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், தற்போது புதிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியமாகியுள்ளது என்று இத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேகமான பயணம்
சாலையும் சாலை திட்டமும் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் பயணத்தின் வேகம் அதிகரித்துக் காலம் குறையும். இதுவே நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாகவும் அமையும்.