கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் ஏர் இந்தியா, அதன் பங்குகளை முழுவதும் விற்பனை செய்ய உள்ளதாக கூறி வந்தது.
இதற்காக விண்ணப்பங்கள் கூட பெறப்பட்டன. ஏர் இந்தியா நிறுவனத்தை தவிர்த்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளையும், கூட்டு நிறுவனமான ஐசாட்ஸில் 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இதில் ஆர்வமுள்ளவர்கள் கடந்த மார்ச் 17, 2020க்குள் விண்ணபிக்கலாம் என்றும் முன்னர் கூறப்பட்டது.
பெருத்த நஷ்டம்
இவ்வாறு முழுமையாக பங்குகளை வாங்கும் ஏலதாரர்களுக்கு நிர்வாகக் கட்டுப்பாடுகளையும் மாற்றித் தரப்படும் என்றும் கூறப்பட்டது. நீண்ட காலமாக மிகப்பெரிய அளவிலான கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக பெருத்த நஷ்டத்தினை மட்டுமே கண்டு வரும் நிலையில், தற்போது கொரோனாவினால் மேலும் பலத்த நஷ்டத்தினை கண்டு இருக்கலாம்.
100% பங்கு விற்பனை
கடந்த ஆண்டிலேயே 76% பங்குகளை விற்பனை செய்ய முயற்சி செய்த ஏர் இந்தியா நிறுவனம், தற்போது அதன் 100% பங்கு விற்பனை செய்ய முடிவு செய்திருந்த நிலையில் தான் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஆனால் மார்ச் 17 வரை காலக்கெடு கொடுத்திருந்த நிலையில், மார்ச் இறுதியில் கொரோனாவினால் நாடு தழுவிய லாக்டவுன் செய்யப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஏர் இந்தியா ஏலத்திற்கான கால அவகாசத்தினை அதிகரித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
முன்னதாக ஏப்ரல் 30 வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் இது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச பொருளாதாரம் கூட முடங்கி போயுள்ள நிலையில், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மார்ச் 31, 2019 நிலவரப்படி, 60,074 கோடி ரூபாய் கடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசு போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இதோடு மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் 52.98 சதவீதம் பங்குகளை விற்பனை செய்வதற்கான ஏலத்தினை, மத்திய அரசு ஏற்கனகே ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இதற்கு முன்னதாக மே 2 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications