இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் உற்பத்தி தளத்தை அமைத்து உள்நாட்டுத் தேவையை மட்டும் அல்லாமல் வெளிநாட்டு தேவைகளை இந்தியாவில் இருந்து பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
குறிப்பாகக் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் உற்பத்தித் துறையில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிகளவில் பயன்பட்டது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு சில முக்கியமான பொருட்கள் மீது கூடுதலாக வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
உற்பத்தி தளத்தை
இந்தியாவில் சமீபத்தில் பல முன்னணி வெளிநாட்டு சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது மட்டும் அல்லாமல் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளையும் துவங்கியுள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரம்
இதேவேளையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சுற்றுச்சூழ்நிலைக்குப் பாதிப்பு ஏற்படாத எரிபொருள் மற்றும் மின்சாரத்தைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக டெல்லி மாநில அரசு எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் ஆகியவற்றைப் பயன்படுத்த டெல்லி மக்களைக் கேட்டுக்கொண்டு வருகிறது.
சோலார் பேனல் மற்றும் சோலார் செல்
இந்நிலையில் இந்தியாவில் சோலார் பேனல் மற்றும் சோலார் செல் உற்பத்தியை மேம்படுத்தவும், இதேவேளையில் வெளிநாட்டில் இருந்து வரும் இதன் இறக்குமதியை குறைக்கச் சுங்க வரியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு வரி விதிப்பு
இதன் படி வருகிற ஏப்ரல் 1, 2022 முதல் சோலார் மாடியூல் மீது 40 சதவீத சுங்க வரியும், சோலார் செல் மீது 25 சதவீத சுங்க வரியும் விதிக்க மத்திய அரசு முடிவு செய்து இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதன் உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அடிப்படை சுங்க வரி இல்லை
தற்போது சோலார் மாடியூல் மற்றும் சோலார் செல் மீது அடிப்படை சுங்க வரி எதுவும் இல்லாத காரணத்தால் இத்துறை வர்த்தகம் எவ்விதமான வரி சுமையும் இல்லாமல் இயங்கி வருகிறது, ஆனால் ஏப்ரல் 1, 2022 முதல் இந்த நிலை முழுமையாக மாற உள்ளது.