எல்ஐசி ஐபிஓ மூலம் பங்கு விற்பனை செய்வதன் மூலம் 30,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது திட்டமிட்ட மதிப்பில் சுமார் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அரசு 5% பங்கினை விற்பனை செய்வதன் மூலம் 55,000 - 65,000 ரூபாய் வரையில் நிதி திரட்டலாம் என அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அரசு இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கலாம் என தெரிகின்றது.
நிதி இலக்கு
அரசு நிதி திரட்டும் இலக்கை பாதியாக குறைத்தாலும், இது இன்று வரையில் இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய பொதுப் பங்கு வெளியீடாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அரசுக்கு சொந்தமான இன்சூரன்ஸ் நிறுவனம் 6 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய மதிப்பீட்டினை விட கணிசமாக குறைந்துள்ளது.
அனுமதி எப்போது?
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று வரை வெளியாகவில்லை. எல்ஐசி ஐபிஓ வெளியிட அரசு 12ம் தேதி வரை அனுமதி வழங்கியுள்ளது. அதற்குள் அரசு பங்குகளை விற்பனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் புதிதாக செபியிடம் மத்திய அரசு பங்கு வெளியீடு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
முதலீடுகள் குறையலாம்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நடந்து வருவதால், இந்த நேரத்தில் எல்ஐசி ஐபிஓ நடத்தினால், அன்னிய முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் பங்கு விற்பனையையும் ஒத்தி வைக்கக் கூடாது. இந்த நிலையில் தான் மத்திய அரசு பங்கு வெளியீட்டு அளவை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பட்ஜெட்டில் அரசு வைத்த நிதி திரட்டல் இலக்கினை குறைய வழிவகுக்கலாம்.
எல்ஐசி இன்சூரன்ஸ் நிறுவனம்
66 வயதான நிறுவனம் 280 மில்லியனுக்கும் அதிகமான பாலிசிகளுடன் இந்தியாவின் இன்சூரன்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. 2020ம் ஆண்டில் இன்சூரன்ஸ் பிரீமிய கலெக்ஷன் அடிப்படையில் 5வது மிகப்பெரிய சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனமாகவும் உள்ளது. எல்ஐசி இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதோடு, நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளராகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications