இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இப்போது எங்கு சென்றாலும் நாம் கையில் பணம் கொண்டு செல்ல தேவையில்லை. போனில் உள்ள யுபிஐ செயலிகளான ஜிபே, போன் பே, பேடிஎம், பிம் யுபிஐ போன்றவற்றை பயன்படுத்தி பணம் செலுத்திவிடலாம்.
யுபிஐ பரிவர்த்தனை நாம் பணத்தை செலவிடும் முறைகளையே மாற்றி அமைத்துவிட்டது. இந்தியா மட்டுமல்ல இலங்கை, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலும் கூட நாம் யுபிஐ பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.யுபிஐ சேவைகளில் வணிகர்களுக்கான எம்டிஆர் (MDR - Merchant Discount Rate) கட்டணத்தை விதிப்பதற்கான நடவடிக்கைகளை முதன்முறையாக அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக ஏற்கனவே அமலில் இருக்கும் ஜீரோ எம்டிஆர் திருத்த சட்டத்தை ரத்து செய்ய அரசு ஒரு புதிய மசோதாவை முன்மொழிந்துள்ளது.

முதலில் எம்டிஆர் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். டிஜிட்டல் மற்றும் ரியல் டைம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கிகள் வணிகர்களிடம் வசூலிக்கும் ஒரு கட்டணம் தான் எம்டிஆர். இது நுகர்வோராகிய நம்மிடம் இருந்து வசூலிக்கப்படுவதில்லை, மாறாக வணிகர்களிடமிருந்து மட்டுமே பெறப்படுகிறது. அதாவது வாடிக்கையாளர் செலுத்தும் பணத்தை வணிகர்களின் கணக்கிற்கு மாற்றும் டிஜிட்டல் சேவைக்கான கட்டணம். இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு 2020ஆம் ஆண்டு ஜீரோ எம்டிஆர் முறையை அறிமுகப்படுத்தியது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மக்களிடமும், வணிகர்களிடமும் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்பட கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த சட்டத்தில் உள்ள பிரிவு 10A-வை நீக்குவதற்கு அரசு இந்த புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது. எனவே விரைவில் வணிகர்களுக்கு எம்டிஆர் கட்டணத்தை அமல்படுத்த இது வழிவகை செய்யும்.
முதல்கட்டமாக அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் அல்லாமல், பெரிய வணிகர்களுக்கு மட்டும் எம்டிஆர் கட்டணத்தை விதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யுபிஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சர்வர் பராமரிப்பு செலவுகள், அதிகரித்து வரும் பரிவர்த்தனை அளவுகள் ஆகியவற்றை கையாள வங்கிகளுக்கும், கட்டண சேவை நிறுவனங்களுக்கும் பெரும் செலவாகிறது. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என இத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படுவதால் சாதாரண நுகர்வோருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. வழக்கம் போல எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் நாம் இலவசமாகவே யுபிஐ பயன்படுத்தலாம். அரசின் இந்த நடவடிக்கை வணிகர்களை மட்டுமே சார்ந்தது குறிப்பாக பெரிய அளவிலான வணிகர்களுக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் தற்போது நடக்கும் 88% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் 23 பில்லியன் பரிவர்த்தனைகளும் அதன் மூலம் 30 லட்சம் கோடி ரூபாய் பணமும் கைமாறுகிறது. இனி வரும் ஆண்டுகளில் யுபிஐ பயன்பாடு தற்போது உள்ளதை விட இன்னும் 10 மடங்கு அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications

