டெல்லி : நாட்டில் நிலவி வரும் வெங்காய தட்டுப்பாட்டால் அரசு வெங்காய விலையை குறைக்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் போவதாக கடந்த சில வாராங்களுக்கு முன்பே தெரிவித்தது.
இந்த நிலையில் தனியார் வெங்காய இறக்குமதியாளர்கள் வெங்காய ஆர்டர்கள் செய்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் 1000 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படலாம் என்றும் அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாகவே வெங்காயத்தின் விலையானது 60 - 100 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. அரசு தரப்பிலும் வெங்காய விலையை குறைப்பதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படும் நிலையில், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனியார் வர்த்தகர்கள் தாங்கள் சிறிய அளவிலான வெங்காயத்தை இறக்குமதி செய்வதாக அரசிடம் தெரிவித்துள்ளன. இது தவிர இந்த மாத இறுதிகுள் வியாபாரிகள் இன்னும் 1000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக புதியதாக ஆர்டர் செய்யப்போகும் வெங்காயம் அடுத்த மாத துவக்கத்தில் இந்தியா வந்து சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வெங்காயம் விலை இந்த மாத இறுதியில் இருந்து கட்டுக்குள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நுகர்வோர் மற்றும் உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், பி.டி.ஐ ட்வீட்டை மேற்கோளிட்டு, கடந்த 2019 - 2020ம் ஆண்டில் தாமதமான கரீப் பருவ பயிரிகளினால் கடந்த ஆண்டை காட்டிலும் 26 சதவிகிதம் குறைந்து 5.2 மில்லியன் டன்னாக குறையலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்த விலையேற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் டிசம்பர் இறுதி வரைக்கும் வெங்காய இறக்குமதிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், இறக்குமதி ஒரு சுமூகமான நிலையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது உள்நாட்டில் வினியோகத்தை அதிகரிக்கவும், விலைகளை கட்டுக்குள் கொண்டு வரவும், வெங்காயம் ஏற்றுமதியை அரசாங்கம் தடை செய்துள்ளது. மேலும் தனியார் மற்றும் பொது வர்த்தக நிறுவனங்கள் மூலம் வெங்காயம் இறக்குமதியை அரசாங்கம் ஊக்குவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே 4000 டன் இறக்குமதி செய்ய ஏலம் எடுத்துள்ள அரசு, எம்.எம்.டி.சி மூலம் 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.