அரசு பல பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை NMP மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகின்றது. இதே முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையான (DIPAM), நஷ்டத்தில் இயங்கிவரும், வருவாய் குறைவாக உள்ள சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய முயற்சி செய்தும் வருகின்றது.
இதற்கிடையில் அரசின் வசம் இருக்கும் நல்ல லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், பங்கினை விற்க அரசு திட்டமிட்டு வருகின்றது.
இதனால் அரசுக்கு ஒரு புறம் நிதி கிடைத்தாலும், மறுபுறம் முகேஷ் அம்பானிக்கு இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு
பில்லியனர் ஆன முகேஷ் அம்பானி தொடர்ந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றார். இதற்காக பல தரப்பிலும் முதலீடுகளை திரட்டி வருகின்றது. இதற்கிடையில் தான் தற்போது அரசு தன் வசம் இருக்கும் ரிலையன்ஸ் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு வருகின்றது. இது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
பங்கினை விற்பனை செய்ய திட்டமிடும் அரசு
இது குறித்த வெளியான தகவல்கள் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் உள்ள பங்கினை, அரசு SUUTI மூலம் விற்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. இதனை நிர்வகிக்க விரைவில் ஒரு இடைத்தரகரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 180 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என தெரிகின்றது.
எவ்வளவு பங்கு விற்பனை?
இதற்காக DIPAM விரைவில் ஒரு இடைத்தரகரை நியமிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அரசின் வசம் 0.17% பங்கு, அதாவது 11771002 பங்குகள் உள்ள நிலையில், இதில் 8 லட்சம் பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் 180 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்ட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்போது பங்கு விலை
இதற்கிடையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, 1.53% அதிகரித்து 2,260.80 ரூபாயாக அதிகரித்து காணப்படுகின்றது. இன்றைய உச்ச விலை 2266.45 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலையானது 2236.80 ரூபாயாகும். இதன் வரலாற்று உச்ச விலை 2,369.35 ரூபாயாக காணப்படுகிறது.
பொன் முட்டையிடும் வாத்து
அரசு தன் வசம் இருக்கும் சில நிறுவனங்களின் பங்கு விற்பனை, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் விற்பனை, பங்கு வெளியீடு மூலம் பங்கு விற்பனை, ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்கு விற்பனை, ரிலையன்ஸ் போன்ற நல்ல லாபம் கொடுக்கும் பங்குகளை அரசின் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்வது என்பது, பொன் முட்டையிடும் வாத்தினை விற்பதற்கு சமம்.
உள்கட்டமைப்பு துறையில் முதலீடு
இதன் மூலம் திரட்டப்படும் நிதியினை அரசு மீண்டும் உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்வதாக கூறினாலும், இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானமும் குறையும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
ஏற்கனவே பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மூலம் செலவினை குறைக்க பல வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதேபோல சில ரயில்கள் தனியார்மயம் என திட்டங்களின் மூலம் அரசு கணிசமான தொகையினை திரட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications