பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் அரசு கையிருப்பில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்ட கடந்த ஆண்டு அறிவித்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவு மத்திய அரசு இலக்கை அடைய முடியாமல் போனது. மத்திய அரசின் 2.1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு ஈர்ப்பு இலக்கில் 90,000 கோடி ரூபாய் அளவிலான நிதி நிதியியல் நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டது.
ஆனாஸ் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட கடன் சலுகை, அதிகரித்து வரும் வாராக் கடன், திவாலாகும் நிறுவனங்கள், வங்கிகளின் நிதிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்திய நிதியியல் நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிகளவில் பாதிக்கப்பட்டதால் இப்பிரிவு முதலீட்டைத் திரட்ட முடியாமல் போனது.
இந்நிலையில் ஜனவரி 20, 2021 வெளியான அரசு தரவுகள் படி மத்திய அரசு தனது 2.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இலக்கை அடைய முடியாமல் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து வெறும் 15,220 கோடி ரூபாய் மட்டுமே முதலீடாகப் பெற்றுள்ளது என்று இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஏர் இந்தியா, BPCL, CONCOR மற்றும் SCI ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய துரிதப்படுத்தியுள்ள நிலையிலும், இந்நிறுவனப் பங்குகள் விற்பனையை பிப்ரவரி மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் சந்தை கணிப்புகள் படி இந்தத் திட்டங்கள் அடுத்த நிதியாண்டில் தான் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.