டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தற்போது 1,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 29 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க, மத்திய அரசு பலவேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
வருங்கால வைப்பு நிதியை எடுத்துக் கொள்ளலாம்
இவ்வாறு கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் தத்தம் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் தங்களது அத்தியாவசிய தேவைக்குக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு அதிரடி சலுகை
இந்தியாவில் கொடிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கும் அமலில் உள்ளதால் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் போது தேவைபடும் பொருளாதார தேவைக்காக, தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
விரைவில் இந்த தொகை கிடைக்கும்
மேலும் இந்த அறிவிப்பின் படி, தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதனைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை எனவும் கூறப்படுகிறது. இது மற்ற திட்டங்களைப் போல் அல்லாமல், பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் கிடைக்க உறுதி செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
EPFO இணையத்தில் பதிவு
இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது நிலவும் சூழலில், 60 மில்லியன் வாடிக்கையாளர்களும் புதிய விதிமுறைகளின் படி தங்கள் கணக்கிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் EPFO இணையதளத்தில் (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) தங்களது UAN எண்ணை பதிவு செய்து ரகசிய பாஸ்வேர்டை பதிவு செய்து கணக்கிற்குள் செல்ல வேண்டும்.
இதையெல்லாம் செய்யுங்க
அங்கு ஆன்லைன் சர்வீசஸ் மற்றும் CLAIM என்ற பிரிவிற்குச் சென்று அதில் Outbreak of pandemic என்பதை தேர்வு செய்தால், ஓடிபி வரும். அதனை பதிவு செய்தால் விதிமுறைகளின் படி தாங்கள் கேட்ட தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், ஆனால் அதற்கு முன்னர் உங்களது பேங்க் செக் மற்றும் பாஸ்புக்கினை ஸ்கேன் செய்து, JPG and JPEG பார்மேட்டில் 100 கேபி முதல் அதிகபட்சமாக 500 கேபி வரை உள்ளவாறு அப்லோடு செய்யப்பட வேண்டும்.
வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என எனத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் பயன் பெற்றுக் கொள்ள முடியும்.