போர் பதற்றத்தின் காரணமாக ஈரான் ஹார்மோஸ் ஜலசந்தியை கிட்டத்தட்ட 3 மாதமாக மூடி வைத்துள்ளது. இந்த வழித்தடம் தான் மிகவும் முக்கியமான வழித்தடம். ஏனென்றால் எல்பிஜி சிலிண்டர், கச்சா எண்ணெய் போன்றவை இந்த ஒரு வழித்தடம் வழியாகப் பிற நாடுகளைச் சென்றடைகிறது. இதனால் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கச்சா எண்ணெய்யின் விலை விண்ணை எட்டி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் தொடர் அதிகரிப்பில் உள்ளது. அதோடு எல்பிஜி சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டு புக்கிங் செய்வதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முன்பெல்லாம் கேஸ் ரீஃபில் செய்ய 21 நாட்களுக்கு ஒரு முறை புக்கிங் செய்யலாம். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் கடும் தட்டுப்பாட்டினால் இந்த காலக்கெடு 45 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் வீட்டில் உபயோகிக்கப்படும் டொமஸ்டிக் சிலிண்டரின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள கமர்சியல் சிலிண்டரின் விலை நேற்றைய தினம் 46 ரூபாய் அதிகரித்து, ரூ.3283-க்கு விற்பனையாகி வருகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.928.50-க்கு விற்பனையாகிறது.
இதுதான் தற்போது அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு பிரச்சனையாக மாறியிருக்கிறது. சாமானியர்களின் பாக்கெட்டில் கை வைக்கக் கூடாது என்பதற்காக அரசு வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் 650 ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதோடு ரூபாயின் மதிப்பு தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது, இதில் இறக்குமதி பிரச்சனை வேறு.. ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால் ஒவ்வொரு பொருளையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கே பெரும் செலவாகிறது. இந்த மூன்றும் தான் தற்போது எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் இழப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் பொதுமக்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக அரசு விலையில் மாற்றம் செய்யாமல் இருப்பது தான் ஹைலைட். சிலிண்டர் விலை ஒருபுறம் இருக்க தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையும் சாமானியர்களை வாட்டி வதைக்கத் தான் செய்கிறது. ஆனால் இந்த விலை உயர்வும் போதாது. இதற்கு மேல் விலை அதிகரித்தால் மட்டுமே எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
போர் பதற்றம் முடிவுக்கு வந்தால் இது போன்ற பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அப்படி இல்லை என்றால் அரசு தொடர்ந்து கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications