கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவே இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகக் கூறி, கடந்த 2016ம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த சமயத்தில் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இவற்றை வங்கிகளில் திருப்பி ஒப்படைக்கும் படி கூறப்பட்டது.
புதிய நோட்டுகள் அறிமுகம்
பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய வடிவிலான 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிய வடிவத்தில் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன. அதன் பின்னர் 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய். 10 ரூபாய் நோட்டுகளும் அதன் பின்னர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய நோட்டுகள் அச்சிடப்படவில்லை
இந்த நிலையில் இந்தியாவில் உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சிடப்படவில்லை என்று லோக் சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இந்த நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக லோக் சபாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு ரூ.2000 நோட்டு புழக்கம்
மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த, மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் சிங் தாகூர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 2018 மார்ச் 30ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 3,362 மில்லியன் ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அது 2021 பிப்ரவரி 26 நிலவரப்படி 2,499 மில்லியன் தாள்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அச்சிடுதல் நிறுத்தம்
இது மதிப்பு அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 37.27%ல் இருந்து, 17.78% ஆக குறைந்துள்ளது. இது உயர் மதிப்பு நோட்டுகளால் தான் ஊழல், கருப்புப் பணம், கள்ள நோட்டு போன்ற மோசடிகள் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், மத்திர அரசு அச்சிடுதலை குறைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நோட்டுகளை மத்திய அரசு தடை செய்யப்போகிறது என்ற பொய் செய்தியும் பரவியது. இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது