வருவாய், வராக்கடன், சந்தை ஆதிக்கம், சிறப்பான நிர்வாகம் எனப் பல காரணங்களுக்காக அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைத்து வருகிறது. இது ஊழியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தாலும் மத்திய அரசு தொடர்ந்து தனது பணிகளைச் செய்து வருகிறது.
இதன் அடிப்படையில் மத்திய அரசு தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டில் அல்லது நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் 3 பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை வருகிற மார்ச் மாத இறுதிக்குள் இணைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு.
3 பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
நேஷனல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ லிமிடெட் மற்றும் ஒரியென்டல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் ஆகிய 3 பொத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைத்து ஒற்றை நிறுவனமாக இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஒப்புதலை மூன்று நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் கொடுத்த நிலையில் தற்போது இணைப்பை மார்ச் மாத இறுதிக்குள் நடத்த மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை செய்து வருவதாக நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடக்கும்
3 பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இணைப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இதன் இணைப்புகள் அடுத்தச் சில வாரங்களுக்குள் நடக்கும். ஏற்கனவே இந்த இணைப்பிற்காக ஒப்புதல் பெற அறிக்கை நாடாளுமன்ற முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதித்துறையின் செயலாளர் ராஜீவ் குமார் பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தை
நேஷனல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ லிமிடெட் மற்றும் ஒரியென்டல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் ஆகிய 3 பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைத்து ஒற்றை நிறுவனமாக இயங்கும் நிலையில் இதைப் பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால் அதற்கான முடிவை இணைப்பிற்குப் பின்பு தான் எடுக்கப்படும் என நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
நிதி உள்ளீடு
இந்த 3 இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இணைப்பைச் செயல்படுத்தவும், அதன் நிர்வாகத்தை எளிமையாக்கவும் மத்திய அரசு அடுத்த நிதியாண்டில் சுமார் 6950 கோடி ரூபாய் அளவிலான நிதியை இந்த 3 நிறுவனங்களில் நிதி உட்செலுத்த உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சந்தை நிலவரம்
இந்த 3 நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் சுமார் 35 சதவீத சந்தை வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இதுமட்டும் அல்லாமல் சுமார் 200 இன்சூரன்ஸ் திட்டங்கள் உடன் 41,461 கோடி ரூபாய் அளவிலான ப்ரீமியம் தொகை பெற்று வருகிறது.
மேலும் இந்த 3 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 9,243 கோடி ரூபாய், இந்தியா முழுவதும் சுமார் 6000 அலுவலகங்களும் 44,000 ஊழியர்களையும் கொண்டுள்ளது.