இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டு வந்த தொடர் வர்த்தகப் பாதிப்பின் காரணமாகவும், கொரோனா பாதிப்பு, கடன் சலுகை ஆகியவற்றின் எதிரொலியாக இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் அளவுகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதனால் பொதுத்துறை வங்கிகளின் நிதிச்சுமை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் அதன் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது.
இதைச் சமாளிக்கப் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் அனைத்தையும் தனியாகப் பிரித்து ஒரு வங்கி அல்லது நிதி அமைப்பின் மூலம் நிர்வாகம் செய்யும் முடிவை பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் பட்ஜெட் 2021
இன்று முதலீட்டுச் சந்தையையும், வர்த்தகச் சந்தையையும் குதூகலப்படுத்திய 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பொதுத்துறையில் இருக்கும் வாராக் கடனை கைப்பற்றவும், நிர்வாகம் செய்யவும், அதற்கான தீர்வு காணவும் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து ஒரு வாராக் கடன் வங்கியை அமைக்க உள்ளது.
வாராக் கடன்
இந்தப் புதிய வங்கி ஏஆர்சி (asset reconstruction company), ஏஎம்சி (asset management company) மற்றும் ஏஐஎப் (alternative investment funds) ஆகிய கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுப் பொதுத்துறை வங்கிகளில் உருவாகியுள்ள வாராக் கடனுக்கு விரைவில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வாராக் கடன் வங்கி இயங்கும் முறை
இப்புதிய வாராக் கடன் வங்கியின் ஏஐஎப் அமைப்பு அரசு மற்றும் பிற வங்கித் துறையில் இருந்து நிதியைப் பெற்றும், ஏஆர்சி அமைப்புப் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடனை தள்ளுபடி விலைக்குப் பேச்சுவார்த்தை நடத்தி கடன் மற்றும் அதன் தொடர்புடைய சொத்துக்களைக் கைப்பற்றும், ஏஎம்சி அமைப்புக் கடனை மறுசீரமைப்புச் செய்து விற்பனை செய்யும், இதற்கான கட்டணத்தையும் வங்கிகளிடம் இருந்து பெறும்.
வங்கித் துறை
இப்படியொரு வங்கியை மத்திய அரசு உருவாக்க உள்ளது எனச் சில வாரங்களுக்கு முன்பே தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்திருந்த நிலையில் பட்ஜெட் அறிவிப்பின் மூலம் இது உறுதியாகியுள்ளது. மேலும் இந்தப் புதிய வாராக் கடன் கட்டமைப்பின் மூலம் இந்த வங்கித்துறையின் நிதி நிலை மற்றும் அதன் மதிப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைய உள்ளது.
15 சதவீத வாராக் கடன்
பொதுத்துறை வங்கிகள் தற்போது வாராக் கடன் அளவு 7 சதவீதமாக இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பின் மூலம் ஏற்பட்டு உள்ளது பாதிப்புகள் இதன் வாராக் கடன் அளவீடு 15 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு பொதுத்துறை வங்கிகளுக்கு ஒரு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.
15 லட்சம் கோடி ரூபாய்
இதேவேளையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. இதனால் அரசின் சுமை பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வங்கித்துறையில் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடன் இருக்கிறது.