பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் லாபம் அடைந்து வரும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.
இந்த அறிவிப்பு வெளியான முதல் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவிய காரணத்தால் அறிவிப்பு வெளியான அடுத்த 12 மணிநேரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்புதிய வட்டி விகித குறைப்பை முழுமையாகத் திரும்பப்பெற்று பழைய வட்டி விகிதத்தை நடைமுறைப்படுத்தினார்.
இந்தத் திடீர் மாற்றத்திற்கு மேற்கு வங்கம் தேர்தல் தான் முக்கியக் காரணம் எனக் கருத்து நிலவுகிறது.
சிறு சேமிப்புத் திட்டங்கள்
இந்திய வங்கிகள் மற்றும் தபால் துறையில் இருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்துள்ள மாநிலங்கள் பட்டியலில் முதல் இருக்கிறது மேற்கு வங்காளம். அரசின் இந்தச் சிறு சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ள மொத்த தொகையில் சுமார் 15 சதவீதம் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தது.
மேற்கு வங்காளம் தேர்தல் 2021
மேற்கு வங்காளத்தில் தற்போது நடந்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியாக இருப்பது பிஜேபி தான். ஏற்கனவே இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் காரணத்தால் இந்தத் தேர்தலின் முடிவுகளுக்கு மக்கள் மத்தியில் அதிகளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட்டி குறைப்பு
மேற்கு வங்காள மக்கள் சிறுசேமிப்புத் திட்டத்தில் அதிகம் முதலீடு செய்திருக்கும் நிலையில், இத்திட்டங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தால் தேர்தலில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் தான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட 12 மணிநேரத்திற்குள் வட்டி குறைப்பைத் திரும்பப்பெற்று பழைய வட்டி விகிதத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்ததுள்ளது எனக் கருத்து நிலவுகிறது.
சிறு சேமிப்புத் திட்டம்
அரசின் இந்தச் சிறு சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம் என்பதால் மேற்கு வங்காளம் மட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து மாநிலங்களில் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் முக்கிய முதலீட்டுத் தளமாக இந்தச் சிறு சேமிப்புத் திட்டங்கள் உள்ளது.
சாமானிய மக்களுக்கு அதிகப் பாதிப்பு
இந்நிலையில் நேற்று வெளியான அறிவிப்பின் படி சிறு சேமிப்புக்கான வட்டி விகிதத்தைக் குறைந்தால் சாமானிய மக்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும், குறிப்பாகச் சிறு சேமிப்புத் திட்டத்தில் அதிகம் முதலீடு செய்திருக்கும் மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும்.