இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் அதிகப்படியான வர்த்தகத்தை உலக நாடுகளில் இருந்து பெற்று, அதிகப்படியான வருவாய் மற்றும் லாபத்தையும் பெற்றது.
ஆனால் இதோடு சில முக்கியமான பிரச்சனைகளையும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வந்துள்ளது, ஆனால் இந்தப் பிரச்சனை ஐடி ஊழியர்களுக்குச் சாதகமாக மட்டும் அல்லாமல் ஜாக்பாட் ஆக மாற்றியுள்ளது.
2021ல் ஜூன், ஜூலை காலத்தில் இந்திய ஐடி துறையில் உருவான The Great Resignation காலம் 2022ஆம் ஆண்டிலும் தொடரும் எனத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஐடி ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
The Great Resignation காலம்
2021ல் இந்தியா முழுவதும் டிரெண்டான முக்கியமான சொற்களில் The Great Resignation-ம் ஒன்று. இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 2 வருடத்தில் பெற்ற அதிகப்படியான வர்த்தகத்தை உரியக் காலத்திற்குள் திறம்பட முடிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடிவு செய்தது.
ஊழியர்கள் வெளியேற்றம்
இதற்காக ஐடி நிறுவனங்கள் சக போட்டி நிறுவனங்களில் இருந்து அதிகப்படியாக ஊழியர்களை ஈர்த்துப் பணியில் அமர்த்தி வந்தது. இது அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களிலும் முக்கியமான பிரச்சனையாக மாறிய காரணத்தால் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.
2022ஆம் ஆண்டிலும் தொடரும்
இந்த மோசமான காலம் 2022ஆம் ஆண்டிலும் தொடரும் என்பது ஐடி நிறுவனங்களுக்குச் சோகமான செய்தியாக இருந்தாலும், ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் ஆகவே உள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்
சக போட்டி நிறுவனங்களில் இருந்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் போது இந்திய ஐடி நிறுவனங்கள் எப்போதும் இல்லாத வரையில் 70 முதல் 120 சதவீத சம்பள உயர்வுடன் பணியில் அமர்த்துகிறது. இதை விட ஐடி ஊழியர்களுக்குப் பெரிய ஜாக்பாட் கிடைக்காது.
டிசம்பர் காலாண்டு முடிவுகள்
மேலும் 2022லும் இந்திய ஐடி துறையில் Great Resignation காலம் தொடரும் என்பதை ஐடி ஊழியர்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் அறிவித்துள்ள ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
டிசிஎஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-ன் டிசம்பர் காலாண்டின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் (attrition rate) யாரும் எதிர்பார்க்காத வகையில் 15.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் இது 11.9 சதவீதமாக மட்டுமே இருந்தது, இதேவேளையில் இந்திய ஐடி துறையில் டிசிஎஸ்-ன் 15.3 சதவீதம் தான் மிகவும் குறைந்தது என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்போசிஸ்
டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனங்களாக விளங்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் (attrition rate) 25.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 20.1 சதவீதமாகவும், கடந்த வருடம் டிசம்பர் காலாண்டில் 11 சதவீதமாக இருந்தது என இன்போசிஸ் தெரிவித்துள்ளது. 3 மாதத்தில் 25 சதவீத ஊழியர்கள் வெளியேறினால் ஒரு நிறுவனத்தால் எப்படித் திறன்பட விளங்க முடியும்.
விப்ரோ
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் விப்ரோ 2021ல் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தாலும் ஊழியர்கள் வெளியேற்றம் இந்நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. விப்ரோ நிறுவனத்தின் attrition rate டிசம்பர் காலாண்டில் 22.7 சதவீதமாக உள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 20.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.