இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கிய ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடி, அதிகளவிலான கடன் சுமை, நிர்வாகப் பிரச்சனை காரணமாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து விமானச் சேவை அளிக்க முடியால் முழுமையாகத் தரைதட்டியுள்ளது.
ப்ளூம்பெர்க்-ன் 27 சர்வதேச விமான நிறுவனங்கள் அடங்கிய குறியீட்டு 2020ஆம் ஆண்டுக் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பால் 42 சதவீதம் சரிவை எதிர்கொண்டுள்ளது.
ஆனால் ஜெட் ஏர்வேஸ் தரையிறங்கியிருக்கும் இந்த மோசமான நிலையிலும் இந்நிறுவனப் பங்குகள் 150 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்
ஜெர் ஏர்வேஸ் திவாலாக அறிவிக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்நிறுவனத்திற்குக் கொடுத்தோர் 3.4 பில்லியன் டாலர் கடனை திரும்பப் பெற போராடி வரும் நிலையிலும், இந்நிறுவனத்திற்காகக் குரல் கொடுக்க ஊழியர்கள் யாரும் இல்லாத நிலையில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 150 சதவீத வளர்ச்சி அடைந்தது எப்படி எனச் சந்தை கண்காணிப்பாளர் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
கடன்
இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தோர் கடனை திரும்பப் பெறுவதற்காக ஒரு குழுவை அமைத்தது. இக்குழு கடந்த மாதம் 3.4 பில்லியன் டாலர் கடனை எப்படித் திரும்பப் பெறுவது என ஒரு திட்டத்தை உருவாக்க ஒப்புதல் பெற்றது. இதனால் இந்நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட கடனை திரும்பப் பெற்றாலும், விமான நிறுவனம் மீண்டும் இயங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.
ஆனாலும் இந்நிறுவனப் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
ரீடைல் முதலீட்டாளர்கள்
ஜெர் ஏர்வேஸ் திவாலாகும் நிலையில் இதன் மூலம் லாபம் அடையும் கடைசி ஆள் ரீடைல் முதலீட்டாளர்கள் தான். ஜெட் ஏர்வேஸ் இந்தக் கடன் தீர்வுக்குப் பின் நிறுவனத்தில் முக்கியமான மறுசீரமைப்புச் செய்து மீண்டும் விமானச் சேவையில் இறங்க சில வாய்ப்புகள் உள்ளதாக டைமென்ஷன்ஸ் கார்பரேட் பைனான்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் தெரிவித்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் Vs ஏர் இந்தியா
ஒரு காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை விடவும் சிறப்பான சேவை அளித்து இந்திய மக்களின் விரும்பத்தக்க நிறுவனமான இருந்தது ஜெட் ஏர்வேஸ். மேலும் இந்நிறுவனத்தின் வெளிநாட்டு விமானப் பயணத்தில் இலவச உணவு, டிவி மற்றும் இசை போன்ற பொழுதுபோக்கு சேவைகளைக் கொடுத்தால் ஏர் இந்தியாவை விடவும் அதிகளவிலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் ஏர் இந்தியா பெற்றது.
பட்ஜெட் ஏர்லைன்ஸ்
இந்தியாவில் மலிவு விலை விமானச் சேவை கொடுக்கப் பல நிறுவனங்கள் வந்த காரணத்தால் இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் குறைந்து, வர்த்தகம் குறைந்து கடன் சுமையில் சிக்கியது.
இதன் எதிரொலியாகவே தற்போது விமானச் சேவை அளிக்க முடியாமல் தரையிறங்கியுள்ளது ஜெட் ஏர்வேஸ்.
ஜெட் ஏர்வேஸ் பங்குகள்
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 13 ரூபாய் வரையில் சரிந்தது. இதனால் இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சோகத்தில் மூழ்கினர், இதே காலகட்டத்தில் கொரோனா பாதிப்பால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகள் முடங்கியது.
ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடனை வசூலிக்கத் திட்டம் தீட்டப்பட்டு ஒப்புதல் பெற்ற நிலையில், இன்று ஒரு பங்கு விலை 71.90 ரூபாய் வரையில் உயர்ந்து 150 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.