இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் எல்கட்ரிக் கார் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் நிலையில், உற்பத்தியை அதிகரித்து வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டது.
இதன் அடிப்படையில் இந்தியாவை விட்டு வெளியேறும் ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலையைப் பல மாத பேச்சுவார்த்தைக்கு பின் டாடா மோட்டார்ஸ் வாங்குவதற்கு இரு தரப்பிலும் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஃபோர்டு நிறுவனம்
அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு வர்த்தகச் சரிவு, அதிகளவிலான நஷ்டம் ஆகியவற்றின் காரணமாக ஃபோர்டு இந்தியாவில் இருக்கும் தனது இரு தொழிற்சாலையை விற்பனை செய்துவிட்டு மொத்தமாக வெளியேறுவதாக அறிவித்தது.
டாடா மோட்டார்ஸ்
இந்த அறிவிப்பு வெளியான உடனே டாடா மோட்டார்ஸ் இரு தொழிற்சாலையும் கைப்பற்ற முடிவு செய்து பேச்சுவார்த்தையைத் துவங்கியது. ஆனால் ஃபோர்டு தனது எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக இந்திய தொழிற்சாலையைப் பயன்படுத்த உள்ளதாக அறிவித்தது. இதனால் டாடா மோட்டார்ஸ் கைப்பற்றல் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.
சனந் தொழிற்சாலை
இந்தச் சூழ்நிலையில் ஃபோர்டு நிறுவனம் இந்திய தொழிற்சாலையை எலக்ட்ரிக் வாகனங்களுக்காகப் பயன்படுத்தவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்த நிலையில், டாடா மோட்டார்ஸ் ஃபோர்டு நிர்வாகங்கள் குஜராத் மாநிலத்தில் இருக்கும் சனந் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
குஜராத் அரசு ஒப்புதல்
ஏப்ரல் மாதம் முதலே ஃபோர்டு நிறுவனத்தில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், குஜராத் ஃபோர்டு தொழிற்சாலையைக் கைப்பற்ற அம்மாநில சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் ஃபோர்டு நிர்வாகம் இதர விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளது.
சென்னை தொழிற்சாலை
இதற்காகத் திங்கட்கிழமை ஃபோர்டு மற்றும் டாடா மோட்டார்ஸ் முதற்கட்ட ஒப்புதலுக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்நிலையில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி திட்டத்தைக் கைவிட்ட ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையின் நிலைமை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.