இந்தியா முழுவதும் இருக்கும் நிறுவனங்கள் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், குஜராத் அரசு அம்மாநிலத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு முக்கியமான உத்தரவை விடுத்துள்ளது.
குஜராத் அரசு மாநிலத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்குக் கட்டாயம் வேக்சின் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில் அரசு நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டாயம் வேக்சின்
ஜூன் 30ஆம் தேதிக்குள் 18 நகரங்களில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் மேனேஜர்கள், ஓனர்கள், பிற அனைத்து ஊழியர்களுக்கும் வேக்சின் கட்டாயம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஜூலை 10க்குள் மாநிலத்தின் பிற பகுதி நிறுவனங்களும் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.
நிறுவனங்கள் மூடல்
மாநில அரசின் உத்தரவைப் பூர்த்தி செய்யாத நிறுவனங்கள் மூடப்படும் எனக் குஜராத் மாநில அரசின் உத்தரவு அறிக்கை தெரிவிக்கிறது. இக்கடுமையான உத்தரவு மூலம் அதிகளவிலான மக்களுக்கு வேக்சின் போடப்படுவது மட்டும் அல்லாமல் மாநிலத்தின் வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் முதல்வர் விஜய் ரூபானி தலைமை வகித்த கூட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 36 நகரங்களில் 18 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அதாவது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் நீட்டிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
வேக்சின் உற்பத்தி
குஜராத் மாநிலத்தின் வேக்சின் உத்தரவு அம்மாநில நிறுவனங்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அனைத்து மாநிலங்களும் அறிவிக்க வேண்டும், இதற்கு ஏற்றார் போல் வேக்சின் உற்பத்தி அதிகரித்து ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான வேக்சினை அளிக்க வேண்டும்.