இந்தியாவில் கடன் சேவைகளை அளிக்கும் பல டிஜிட்டல் சேவை தளங்கள் மூலம் தற்போது அதிகப்படியான பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிய பிரச்சனையைக் கொடுத்துள்ளது.
இந்தப் பிரச்சனைக்காகக் குஜராத் உயர் நீதிமன்றம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை வறுத்தெடுத்துள்ளது. அப்படி என்ன ஆச்சு தெரியுமா..?
விவசாய நிலம்
ராகேஷ் மற்றும் மனோஜ் வர்மா ஆகியோர் குஜராத் மாநிலத்தின் சனந் பகுதியில் ஒரு விவசாய நிலத்தை வாங்கியுள்ளனர். இந்த நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய முயற்சி செய்தனர். நிலத்தைத் தங்கள் பெயருக்கு மாற்றக் கோரி ராகேஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் வருவாய்த் துறையிடம் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பயிர்க்கடன்
இதை விசாரணையின் போது இந்த நிலத்தின் முந்தைய உரிமையாளர் தத்தம் விவசாய நிலத்தின் பெயரில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமார் 4.55 லட்சம் ரூபாய் அளவிலான பயிர்க்கடன் வாங்கியுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் நிலத்தின் உரிமையாளரிடம் கேட்கும் போது கடனை செலுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
31 பைசா நிலுவை
உண்மையை விசாரிக்கும் போது நிலத்தின் உரிமையாளர் வாங்கிய 4.55 லட்சம் ரூபாய் பயிர் கடனில் வெறும் 31 பைசா அதாவது 0.31 ரூபாய் நிலுவையில் இருக்கும் காரணத்தால், இந்த நிலத்தை விற்பனை செய்ய NOC கொடுக்காமல் வருவாய்த் துறை நிலத்தின் பத்திரப் பதிவை நிறுத்தியுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்றம்
இதில் கடுப்பான ராகேஷ் மற்றும் மனோஜ் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையில் எஸ்பிஐ நீதிமன்றத்தில் கடனை நிலத்தின் உரிமையாளர் முழுமையாகச் செலுத்தியதை உறுதி செய்தது.
நீதிபதி பார்கவ் கரியா
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்கவ் கரியா, திறந்த நீதிமன்ற விசாரணையின் போது, "50 பைசாவுக்குக் குறைவான எதையும் (நிலுவைத் தொகையாக) கணக்கிடக்கூடாது என்று வங்கி ஒழுங்குமுறை சட்டம் உள்ளது எஸ்பிஐ வங்கிக்குத் தெரியாதா" என்று கோபத்துடன் கேட்டு உள்ளார்.
மக்களைத் துன்புறுத்தல்
இதோடு எஸ்பிஐ ஏன் மக்களைத் துன்புறுத்துகிறது என்று நீதிபதி கரியா விசாரணையின் போது கேட்டுள்ளார். "இது வங்கி மேலாளரின் துன்புறுத்தலைத் தவிர வேறில்லை. இது மிகவும் கொடுமையானது. மேலும் இந்த வழக்கின் விசாரணை மே 2ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications