முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு மக்களை விசா கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறை மாற்றங்கள் மூலம் மிரட்டி வந்தது யாராலும் மறுக்க முடியாது. 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடென் டிரம்ப்-ஐ தோற்கடித்து வெற்றி அடைந்துள்ள நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஜோ பிடென்.
இந்நிலையில் இந்திய மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான திட்டத்தை ஜோ பிடன் அடுத்தச் சில நாட்களில் அறிவிக்கப்போகிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த அறிவிப்பு இந்திய ஐடி ஊழியர்களுக்கும், அமெரிக்கக் கனவு உடன் வாழும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஜாக்பாட்-ஆக இருக்கப் போகிறது.
விசா மற்றும் கிரீன் கார்டு
அமெரிக்காவில் புதிய அதிபராகத் தேர்வாகியுள்ள ஜோ பிடன் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கும் கொடுக்கப்படும் விசாக்கள், ஹெச்1பி விசா உட்பட அனைத்து விசா வழங்கும் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டு வருகிறார் ஜோ பிடென்.
இது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாடுகளுக்குக் கொடுக்கப்படும் விசா எண்ணிக்கை கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியா
ஒரு பக்கம் விசா எண்ணிக்கை அதிகரிப்பு, மறுபக்கம் நாடுகளுக்கான எண்ணிக்கை கட்டுப்பாடுகளை நீக்கம் என இரு பிரிவிலும் இந்தியர்களுக்குப் பெரிய அளவிலான நன்மை கிடைக்கும்.
இவ்விரு விதிகளும் அமலாக்கம் செய்யப்பட்டால் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அடுத்த சில வருடத்தில் 100 முதல் 150 சதவீதம் அதிகரிக்கும்.
மனைவி மற்றும் கணவன்
இதேபோல் டிரம்ப் ஆட்சியில் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் மனைவி/கணவர்களுக்குக் கொடுக்கப்படும் வொர்க் பிரிமிட் விசாவை நீக்கினார்.
டிரம்ப்-ன் இந்த முடிவால் பல கோடி குடும்பங்கள் சோகத்தில் மூழ்கியது.
இந்த விசாவையும் திரும்பக் கொண்டு வர ஜோ பிடென் நிர்வாக அமைச்சர்கள் குழு ஆலோசனை செய்து வருகிறது. இந்த விதிகள் ஏற்கனவே இருந்த காரணத்தால் இது திரும்பவும் கொண்டு வருவதற்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
கிரீன் கார்டு
மேலும் அமெரிக்காவில் குடியுரிமை பெற விரும்பும் தகுதியான வெளிநாட்டவர்களை குஷிப்படுத்தும் வகையில் கிரீன் கார்டு வழங்குவதில் இருக்கும் நாடு மற்றும் இதர கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்ய ஜோ பிடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளம்
முதலில் பிடன் அரசு அமெரிக்க நாடாளுமன்றத்தில் சம்பளம் அடிப்படையிலான விசா வழங்கும் முறையை அமலாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பின்பு விசா எண்ணிக்கையில் இருக்கும் கட்டுப்பாடுகளைக் குறைக்க அறிவிக்கப்படும் எனப் பிடன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே அறிவித்திருந்தார்.