இந்தியாவின் ஐபிஓ ஸ்டாராக விளங்கும் அசோக் சூட்டா-வின் 702 கோடி ரூபாய் மதிப்பிலான ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ, இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இந்நிறுவனத்தின் ஐபிஓ மூலம் முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் தலைவரான அசோக் சூட்டாவும் புதிய பில்லியனராக ஆக்கியுள்ளது. ஆம் ஹூரன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அசோக் சூட்டா புதிதாக இணைந்துள்ளார்.
ஐபிஓ வெளியிட்டு 2 வாரம் மட்டுமே ஆன நிலையில் 2020 இந்திய பில்லியனர்கள் பட்டியலில் அசோக் சூட்டா இணைந்துள்ளது, ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும், அசோக் சூட்டாவுக்கும் கொண்டாட்டமாக உள்ளது.
சொத்து மதிப்பு
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ இந்திய பங்குச்சந்தையில் கடந்த 10 வருடத்தில் வெற்றிகரமான ஐபிஓவில் முதல் இடத்தில் உள்ளது. இந்த வெற்றியின் மூலம் அசோக் சூட்டாவின் சொத்து மதிப்பு 3,700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் வாயிலாகவே தற்போது அசோக் சூட்டா ஹூரன் ரிச் லிஸ்ட்-ல் இடம் பிடித்துள்ளார்.
282வது இடம்
முதல் முறையாக இந்திய பில்லியனர்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ள அசோக் சூட்டா ஹூரன் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியில் 282வது இடத்தை பிடித்துள்ளார்.
இதோடு இந்த வருடம் புதிதாக இணைந்துள்ளவர்கள் பட்டியிலில் அசோக் சூட்டா டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
புதிய பணக்காரர்கள்
ஹூரன் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியில் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமாகச் சொத்து வைத்திருப்பவர்கள் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் சுமார் 828 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 162 பேர் புதிதாக இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.
இந்த 162 பேரில் அசோக் சூட்டாவும் ஒருவர்.
யார் இந்த அசோக் சூட்டா..?
அசோக் சூட்டா கடந்த 30 வருடங்களாக இந்திய ஐடி துறையில் முக்கிய இடத்தை பிடித்து தனது பாதையில் தொடர்ந்து வெற்றி கண்டு வருபவர். விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஐடி துறையின் உச்சத்தில் இருந்த போது Mindtree நிறுவனத்தை துவங்கியதில் முக்கிய காரணியாக இருந்து துணை நிறுவனராக இருந்தார். 2007 Mindtree நிறுவனத்தின் ஐபிஓ-வில் ஏற்பட்ட அதே தாக்கத்தை தற்போது மீண்டும் முதலீட்டாளர்களுக்கு அசோக் சூட்டா கொடுத்துள்ளார்.
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ்
2011ஆம் ஆண்டு ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தனது நெருங்கிய நண்பர்களோடு இணைந்து துவங்கினார் அசோக் சூட்டா. இந்த நிறுவனம் தான் தற்போது இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தையில் இறங்கிய நிறுவனங்களில் அதிகளவில் முதலீடுக்காக கோரப்பட்ட நிறுவனங்களில் அசோக் சூட்டா-வின் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் முதல் இடத்தில் உள்ளது.
மாபெரும் வெற்றி
இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களாகவே முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான லாபத்தை அடையாத நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் இந்திய ஐடி சந்தையில் இருந்து ஒரு முன்னணி நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்கும் காரணத்தினால் Happiest Minds நிறுவனத்திற்கு அதிகளவிலான வரவேற்பு இருந்தது.