இந்திய சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் கடந்த 2009 முதல் செயல்பட்டு வந்தது.
சரி ஏன் இந்திய சந்தையில் இருந்து ஹார்லி வெளியேறுகிறது. வாருங்கள் பார்க்கலாம்.
இந்தியாவில் இருந்து விலக திட்டம்
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, மோட்டார் துறை பெரும் விற்பனை சரிவைக் கண்டுள்ளது. இந்த நிலையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், தனது Rewire என்ற எதிர்கால திட்டம் மூலம், குறைந்த வருவாய் தரும் நாடுகளில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்துள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
விற்பனை பலமான சரிவு
சரி ஏன் இந்தியாவை விட்டு வெளியே செல்கிறது. ஹார்லி-டேவிட்சன் இந்தியா, கடந்த நிதியாண்டில் 2,500-க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது சர்வதேச சந்தைகளில் மிகக் குறைவான வாகனங்களை விற்பனை செய்த மோசமான சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
டீலர்கள் மூலம் சர்வீஸ் வசதி உண்டு
இதன் காரணமாக 70 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் ஹரியானாவின் பவலில், உள்ள ஆலையை மூட உள்ளது. எனினும் இந்திய சந்தையிலிருந்து வெளியேறினாலும், தொடர்ந்து டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுக்கு சர்வீஸ் வழங்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.
நஷ்டத்தினை தவிர்க்க நடவடிக்கை
2021 - 2025ம் ஆண்டு வரை தனது வர்த்தகத்தை Rewire எனப்படும் சீர்திருத்த முறையில் செயல்படுத்த உள்ளதாகவும் ஹார்லி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதீத வருவாய் தரக்கூடிய சந்தையில் மட்டும் கவனத்தை செலுத்த உள்ளது. இதனால் நஷ்டத்தினை தவிர்க்க முடியும் என இந்த நிறுவனம் நினைக்கிறது.
ஹார்லிக்கு செலவு
நஷ்டத்தினை தவிர்க்க இந்தியாவை விட்டு வெளியேற நினைத்தாலும், இந்த ஆண்டில் மட்டும் 75 மில்லியன் டாலரை ஹார்லி நிறுவனத்தினை மறுசீரமைப்பதற்கு செலவிட வேண்டியிருக்கும்.
அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான இது இந்தியாவினை விட்டு வெளியேறுவது, இந்தியாவிற்கு சற்று பின்னடைவை கொடுக்கும் விஷயமாக கருதப்பட்டாலும், இது இந்தியா நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.