கொரோனா வைரஸுக்கு இண்ட்ரோவே தேவை இல்லை. உலகம் முழுக்க சுமார் 2.19 லட்சம் பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
சுமார் 8,950 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து இருக்கிறார்கள்.
இப்போது மெல்ல இந்தியாவின் பெரு நிறுவனங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் இந்த கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவின் கொரோனா
இந்தியாவில் இதுவரை சுமார் 174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. 3 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கொஞ்சம் வேகமாகவே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என்பது தான் கவலைக்குரியது. இந்தியாவிலேயே அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஐடி நிறுவனங்கள்
சில நாட்களுக்கு முன்பு தான் பெங்களூரில் இருக்கும் கூகுள் இந்தியா நிறுவனத்தில், ஒரு மென் பொருள் பொறியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அப்போதே ஐடி கம்பெனிகள் எல்லாம் சுதாரித்துக் கொண்டு, வீட்டில் இருந்தே எல்லா ஊழியர்களையும் வேலை பார்க்க சொல்லி இருக்கலாம்.
பரவல்
பிரச்சனையின் வீரியம் புரிந்து முடிவு எடுப்பதற்குள், மேலும் சிலருக்கு கொரோனா பரவி விட்டது. மைண்ட் ட்ரீ மற்றும் டெல் நிறுவன ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டு பிடித்தார்கள். இப்படியாக ஒவ்வொரு ஐடி நிறுவனத்தில் இருந்தும் ஊழியர்களுக்கு தொற்று இருக்கும் விஷயம் தெரிய வந்து கொண்டே இருக்கிறது.
இன்ஃபோசிஸ்
பெங்களூரில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒரு சாட்டிலைட் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர், கொரோனா வைரஸ் தொற்று இருந்த நபருடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம் என்கிற செய்தி கிடைத்தது. உடனடியாக மொத்த அலுவலகத்தையும் காலி செய்து, தொற்று பரவாமல் இருக்க, இன்ஃபோசிஸ் நிறுவனம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அலுவலக கட்டடத்தில் எடுத்துக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியானது.
போதவில்லை
இப்படி ஐடி நிறுவனங்கள் ஒரு பக்கம் விரைந்து செயல்பட்டு, தங்கள் ஊழியர்களின் உடல் நலத்தை காப்பாற்றினாலும், இன்னொரு பக்கம் ஐடி ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்து கொண்டே தான் இருக்கிறது. கூகுள், டெல், மைண்ட் ட்ரீ போய் இப்போது ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் கொரோனா வைரஸ் புயல் மையம் கொண்டுள்ளது.
ஹெச் சி எல்
இப்போது, ஹெச் சி எல் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் நொய்டா ஹெச் சி எல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஹெச் சி எல் நிறுவனமே சொல்லி இருக்கிறது.
ஜாக்கிரதை
பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மற்றும் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். இருப்பினும் கொரோனா தொற்று குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே மக்களே உஷாராக இருங்கள். சமூக தொடர்பு இல்லாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.