இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் அடுத்த 3- 5 ஆண்டுகளில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை மிகப்பெரியளவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சி விஜயகுமார், ரஷ்யா உக்ரைன் பிரச்சனையால் பெரியளவில் தாக்கம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில் குறிப்பிட்ட அலுவலகங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
பணியமர்த்தலை அதிகரிக்க திட்டம்
தற்போது உலகளவில் 20 இடங்களில் (Nearshore) இருந்து இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இதில் மெக்ஸிகோ, டொராண்டோ, வாங்கூவர், கோஸ்டாரிகா, ருமேனியா உட்பட பல இடங்களிலும் 10,000 பேர் பணி புரிகின்றனர். இந்த எண்ணிக்கையானது 3 - 5 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையானது இருமடங்காகும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தல்
இந்த நிறுவனத்தின் வருவாயில் டெலிகாம், நிதி சார்ந்த சேவைகள், லைஃப் சயின்ஸ், ஹெல்த்கேர் உள்ளிட்ட பலவும் நடப்பு ஆண்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையில் நிறுவனம் நடப்பு ஆண்டில் 35,000 - 40000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது தேவையினை பொறுத்து இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யாவால் பிரச்சனையில்லை
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையால், ஐரோப்பாவின் தேவையில் எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை. நிறுவனம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் தற்போதைக்கு எந்த இருப்பினையும் கொண்டிருக்கவில்லை. இதே ஐரோப்பிய நாடுகளான போலந்து, ருமேனியா, பல்கேரியா உள்ளிட்ட அனைத்தும் தொடர்ந்து செயல்படுகின்றன. அவைகள் தொடர்ந்து வளர்ந்து வரும் சந்தைகளாக உள்ளன. ஐரோப்பாவில் தேவை வலுவாக உள்ளது. உக்ரைன் - ரஷ்யாவால் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
விரிவாக்கம்
நடப்பு நிதியாண்டில் இது சில புதிய இடங்களில் விரிவாக்கம் செய்யப்படலாம். குறிப்பாக ஏற்கனவே செயல்படும் வியட்நாம், ருமேனியா, கோஸ்டாரிகா, மெக்சிகோ மற்றூம் அமெரிக்காவிலும் சில மையங்கள் விரிவாக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாப நிலவரம்
முடிவடைந்த 4ம் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, அதன் ஒருங்கிணை நிகரலாபம் 3593 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து வலுவான தேவை இருந்து வரும் சூழலில் 12 - 14% வருவாய் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.