ஐடி துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜி, செப்டம்பர் காலாண்டுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் அதன் நிகரலாபம் முந்தைய ஆண்டினை விட, 18.5% அதிகரித்து 3,142 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுவே முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 7.4% அதிகரித்தும் காணப்படுகிறது.
இது கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் 2,651 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெச்சிஎல் வருவாய் அதிகரிப்பு
ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் 4.2% அதிகரித்து, 18,594 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 17,841 கோடி ரூபாயாக இருந்தது. இதே டாலரில் வருவாய் 6.4% அதிகரித்து 2507 மில்லியன் டாலராக நிலையான கரன்சியின் மூலம் வளர்ச்சி கண்டுள்ளது.
வரிக்கு முந்தைய லாபம்
ஹெச்சிஎல் வரி வட்டிக்கு முந்தைய லாபம் 4,016 கோடி ரூபாயாகும். இது முந்தைய காலாண்டில் 3,660 கோடி ரூபாயாகும். இது சுமார் 10% அதிகமாகும். இதே ஹெச்சிஎல் டெக்கின் EBIT மார்ஜின் தொகையானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 21.6% அதிகரித்துள்ளது.
அடுத்த காலாண்டில் வளர்ச்சி?
இதற்கிடையில் அடுத்த மூன்று மற்றும் நான்காவது காலாண்டில் நிலையான நாணய மூலம் வருவாய் 1.5 - 2.5% வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதே போல் EBIT மார்ஜினும் நடப்பு நிதியாண்டில் 20 - 21% அதிகரிக்கலாம் என்றும் இந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்பங்களில் முதலீடு
வளர்ந்து வரும் சந்தைகளில் எங்களின் முதலீடுகள் அடுத்த தலைமுறையினருக்கும் ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் நிலையான முதலீடுகளாக உள்ளன. இது வளர்ந்து வரும் சந்தைகளில் எங்களை மேம்படுத்திக் கொள்ள காரணமாக அமைந்துள்ளன என்று, ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
டிவிடெண்ட் எவ்வளவு?
ஹெச்சிஎல் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 15 மாற்றத்தக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 4 ரூபாயும் அறிவித்துள்ளது. இதற்கிடையில் ஹெச்சிஎல் பங்கு விலையானது 3.64% குறைந்து, 828.80 ரூபாயாக சரிவடைந்துள்ளது.