டெல்லி: நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசியம் அற்ற நிறுவனங்கள் தொழில்சாலைகள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
எனினும் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியும் படி அறிவுறுத்தி வருகிறது. இதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் பல நிறுவனங்கள் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஏன் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் கூட செய்து வருகின்றன. சில நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தையும் குறைத்து வருகின்றன.
தாக்கம் இல்லை
ஆனால் உலகளவில் கொரோனாவின் தாக்கம் பரவி வரும் நிலையில், நடப்பு காலாண்டில் பெரிதும் தாக்கம் இல்லை என அறிவித்துள்ளது ஹெச்சிஎல். ஏனெனில் ஹெச்சிஎல்லின் இந்திய ஊழியர்களில் 76% பேர் வீட்டில் இருந்து பணி புரிந்து வருவதாகவும், இதே இந்தியாவுக்கு வெளியே 92% வீட்டில் இருந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எந்தவித இடையூறும் இல்லை
ஆக இதன் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள், வீட்டில் இருந்தும் கூட பணியாற்றி வருவதால், எந்த வித இடையூறும் இல்லை என அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலாண்டு எண்களில் இதன் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் எங்கள் வணிகத்தில் கொரோனாவினால் பெரிய தாக்கம் எதையும் இது வரை நாங்கள் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி
இந்த காலாண்டில் அறிக்கை இதுவரை கணக்கிடப்படாவிட்டாலும், எங்கள் வணிக மாதிரியானது, கடினமான காலங்களில் பின்னடைவுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளதால், நீண்ட காலத்திற்கு வலுவாக வெளிவர எங்களின் வணிக மாதிரி உதவும் என்றும் ஹெச்சிஎல் கூறியுள்ளது. சமீபத்தில் ஹெச் சிஎல் ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர்.
நெருக்கடியை சமாளிப்போம்
மேலும் ஹெச்சிஎல் நிறுவனம் தொடர்ந்து ஜனவரி பிற்பகுதியில் இருந்து கொரோனாவின் தாக்கத்தினை பற்றி கண்காணித்து வருவதாகவும், இதனால் இத்தகைய நெருக்கடி காலத்தினை சமாளிக்கும் விதமாக தயாராகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நாங்கள் எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பது எங்கள் கடமைகளில் முக்கியமான ஒன்று. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் தீவிரமான ஆலோசனையுடன் ஈடுபட்டு வருகிறோம்.
எந்தவித பிரச்சனையுல் இல்லை
மேலும் நாங்கள் தொடர்ச்சியான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறோம். அதோடு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதில் எந்தவித இடையூறையும் காணவில்லை. ஆக எங்களுக்கு மிக உறுதுணையாக இருக்கும் எங்கள் வாடிக்கையாளார்கள் மற்றும் நிறுவனங்கள், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.