நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்த லாக்டவுன் காரணமாக பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்து வருகின்றனர்.
அதிலும் சேவைத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் தகவல் தொழில் நுட்ப துறையில், புதிய பணியமர்த்தல்கள் பெரும்பாலான நிறுவனங்கள் முடக்கியுள்ளன. மேலும் சம்பள குறைப்பு, சம்பள அதிகரிப்பு என பலவற்றினையும் முடக்கி வருகின்றன.
இந்த நிலையில் பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்கள் கூட, புதிய பணியமர்த்தலை முடக்கியுள்ளன.
புதிய பணியமர்த்தல்
இந்த நிலையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவமான ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி விஜயகுமார், கடந்த வியாழக்கிழமையன்று 2020ம் ஆண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் 15,000 பிரெஷ்ஷர்களை (freshers) எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பணியமர்த்தலை தள்ளி வைக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
செயல்பாடுகள் குறைப்பு
நாட்டில் கொரோனாவின் தாக்கத்தினால் பல வாடிக்கையாளர்கள் அவர்களது செயல்பாடுகளை குறைத்துள்ளனர். இன்னும் சிலர் தங்களது புதிய புராஜக்டுகளையும் ஒத்தி வைத்துள்ளனர் என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
லேட்டரல் பணியமர்த்தல் நிறுத்தம்
புதிய ஊழியர்களை பணியமர்த்துவதாக கூறினாலும், லேட்டரல் பணியமர்த்தலை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த லேட்டரல் பணியமர்த்தல் என்பது நிரப்பப்பட வேண்டிய ஒரு வேலைக்காக, ஒரு சிறந்த நிபுணரை பணியமர்த்தும் செய்யும் செயல்முறையாகும். ஆக இந்த பணியமர்த்தல் தற்போது நிறுதபட்டுள்ளது, நிபுணத்துவம் வாய்ந்த மூத்த அதிகாரிகளுக்கான வாய்ப்பினை குறைக்கலாம்.
லாபம் அதிகரிப்பு
ஏனெனில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அடுத்த ஓன்று அல்லது இரண்டு காலாண்டுகளுக்கு செலவு குறைப்பை கோருகிறார்கள். இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் முக்கிய ஐடி நிறுவனமான இது கடந்த மார்ச் காலாண்டில் அதன் நிகர லாபத்தினை 24.3% அதிகரித்து, 3,154 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளது.
சில சவால்களும் உண்டு
எனினும் அடுத்து வரும் காலாண்டுகளில் இதன் வாடிக்கையாளர்கள் புதிய புராஜக்டுகளை தள்ளி வைப்பது, மேலும் பில்லிங் கால தாமதமாக செய்வது போன்ற பல சவால்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும் விஜயகுமார் கூறியுள்ளார். மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுடன் நாங்கள் வலுவான தொடர்புடன் உள்ளோம். ஆக அவை எங்களுக்கு நிலையான வணிகத்தினை அளிக்கிறது. நீண்ட காலத்திற்கு அவை அப்படியே இருக்கின்றன. ஆனால் குறுகிய காலத்தில் சில சவால்கள் இருக்கக் கூடும் என்றும் விஜயகுமார் விளக்கம் கொடுத்துள்ளார்.