நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம், புதிய பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வந்த நிலையிலும் கூட, பல துறைகளில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவித்து வந்தனர். ஆனால் அந்த காலகட்டத்திலும் ஐடி துறையில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக பணியமர்த்தல் என்பது மிக சுறுசுறுப்பாக இருந்து வந்தது.
கொரோனா காலத்தில் டிஜிட்டல் தேவை அதிகரிக்கவே, ஐடி நிறுவனங்கள் பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்தன. இதனால் பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. இந்த நிலையில் இந்த போக்கு இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
கவலையளிக்கும் அட்ரிஷன் விகிதம்
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய ஐடி துறையில் பல நிறுவனங்களிலும் அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளது. அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து பணியமர்த்தல் ஆனது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டிஜிட்டல் திறனுள்ள ஊழியர்கள் பணியமர்த்தல் என்பது அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செலவை குறைக்க திட்டமிடும் நிறுவனங்கள்
இந்த காலகட்டத்தில் அனுபவமுள்ள ஊழியர்களை பணியமர்த்துவதற்கு நிறுவனங்கள் அதிகம் செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. குறிப்பாக ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள கடந்த ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையாக சம்பள உயர்வு, போனஸ் என கொடுக்கப்பட்டன. இதற்கிடையில் செலவினை குறைக்க ஐடி நிறுவனங்கள் பல விஷயங்களை கையில் எடுத்து வருகின்றன.
ஹெச்சிஎல் அதிரடி திட்டம்
ஹெச்சிஎல் நிறுவனம் செலவினை குறைக்கும் விதமாக, புதிய பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக HCL First Careers program திட்டத்தினையும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 0 - 2 வருடம் அனுபவமுள்ள பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அதன் பின்னர் பணியமர்த்தி கொள்கின்றது.
நல்ல வாய்ப்பு
ஹெச்சிஎல் நிறுவனத்தின் இந்த திட்டமானது, குறிப்பாக கல்லூரி முடித்த பிரெஷ்ஷர்களுக்கு, ஒரு நல்ல வாய்ப்பினை வழங்கும் எனலாம். இந்த பயிற்சியினை பெற ஒருவர் நான்கு கட்டங்களின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுவதாகவும், இதற்கு கணிசமான கட்டண விகிதத்தினையும் நிர்ணயித்துள்ளது.
பயிற்சி எத்தனை காலம்
ஐடி துறையில் நல்ல வேலையினை பெற இது வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ள HCL, இந்த பயிற்சியானது ஆறு மாத காலம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு கட்டணம் என்பது 1.5 லட்சம் ரூபாயாகும். ஹெச்சிஎல்-லின் இந்த 6 மாத கால பயிற்சியினை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
செலவு குறையலாம்
இதன் மூலம் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்துவதில் உள்ளதை விட, இதில் செலவும் குறைவு என்பதால் நிறுவனங்கள் தற்போது புதிய பட்டதாரிகளை பணியமர்த்த இதுபோன்ற திட்டங்களை கையாளத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ள இந்த நிலையில், தற்போது ஐடி நிறுவனங்களுக்கான தேவை என்பது மிக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் தற்போது புதிய பட்டதாரிகளை பணியமர்த்த தொடங்கியுள்ளன. குறிப்பாக பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தாங்களே பயிற்சி கொடுத்து, அவர்களை பணியிலும் அமர்த்திக் கொள்கின்றன.
தேர்வு முறை
ஹெச்சிஎல்-லின் இந்த பயிற்சிக்கு விண்ணப்பதாரர்கள் 4 முறையில் இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின்னர் ஆன்லைனில் கவுன்சிலிங் கொடுக்கப்படும், பின்னர் ஆன்லைனில் திறன் தேர்வு, அதன் பிறகு ஆனலைன் நேர்காணல் உள்ளிட்ட நான்கு கட்ட செயல்முறைகள் மூலமாக இந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க கல்வி என்ன?
பிஇ, பிடெக், எம்சிஏ, எம்டெக், எம்.எஸ்சி ( ஐடி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்) உள்ளிட்ட பட்டதாரிகள் - 0 - 2 வருடம் அனுபவம் உள்ளவர்களாக இருக்கலாம். இதற்காக இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும் பட்டதாரிகள், ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
பிஎஸ்சி (ஐடி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்), B,Voc(CS/IT/software development), BCA grartuates - 0 - 2 வருடம் அனுபவமுள்ளவர்கள் - லக்னோ, நாக்பூர், விஜயவாடா மற்றும் மதுரை நகரங்களில் விண்ணபிக்கலாம் என அறிவித்துள்ளது.
பயிற்சிக்கு பிறகு பணியமர்த்தல்
இவர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு அந்தந்த நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த பயிற்சியில் மூன்று மாதம் வீட்டில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 3 மாதங்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனத்திலும் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இது வங்கிக் கடனும் ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவித்துள்ளது. மொத்தத்தில் ஹெச்சிஎல்- நிறுவனத்தின் இந்த திட்டம் வேற லெவல் யோசனை தான்.


Click it and Unblock the Notifications