கொரோனாவால் இந்திய ஐடி துறை தற்போது பல்வேறு புதிய மாற்றங்களை எடுத்து வரும் அதேநேரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் எதிர்கொண்டு வருகிறது. கடந்த 3 மாத காலத்தில் மட்டும் 1 கோடி மக்களுக்கும் அதிகமானோர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
இந்த இக்கட்டான் சூழ்நிலையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல், ஐடி சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களை விடவும் அதிகமான வர்த்தகத்தைப் பெற இந்தக் கொரோனா காலத்தில் போராடி வருகிறது. இதேநேரத்தில் செலவுகளைக் குறைக்கவும், அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தவும் திட்டமிட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஹெச்சிஎல் இந்தியாவில் சிறிய நகரங்களில் வைத்திருக்கும் அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கையை இரட்டிப்புச் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
ஹெச்சிஎல்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் சென்னை, பெங்களுரூ, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களைத் தாண்டி லக்னோ, நாக்பூர், மதுரை, விஜயவாடா போன்ற சிறு நகரங்களில் பெரிய அளவிலான அலுவலகத்தை அமைத்து உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்த 4 சிறிய நகரங்களில் ஏற்கனவே சுமார் 10,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்.
இரட்டிப்பு
ஹெச்சிஎல்-ன் லக்னோ, நாக்பூர், மதுரை, விஜயவாடா அலுவலகங்களில் அடுத்த 2 முதல் 3 வருட காலத்தில் ஊழியர்கள் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கம் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு அருகிலேயே இருக்கலாம். இதனால் மக்கள் அதிகளவில் நகரங்களுக்குப் பயணிப்பதைத் தடுக்க முடியும். இதனால் பெரு நகரங்களை தாண்டில் சிறு நகரங்களிலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மேம்படும்.
விஜயகுமார்
இந்த முடிவைக் குறித்து ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ விஜயகுமார் கூறுகையில், 2016ஆம் ஆண்டில் இருந்து ஹெச்சிஎல் பெரு நகரங்களை மட்டுமே நம்பியிருக்காமல் சிறிய நகரங்களில் அலுவலகம் அமைக்கும் திட்டத்தைத் துவங்கினோம். இதன் மூலம் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு அருகிலேயே இருக்க முடியும், இதனால் ஊழியர்களும், நிறுவனத்திற்கும் வர்த்தகச் சந்தைக்கும் பெரிய அளவிலான நன்மை ஏற்படும் எனத் தெரிவித்தார்.
இத்திட்டத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சொல்ல முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2-3 வருட காலத்தில் லக்னோ, நாக்பூர், மதுரை, விஜயவாடா அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது.
கொரோனா
கொரோனா எதிரொலியாக இந்தியாவில் 90 சதவீத மென்பொருள் துறை சார்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றத் துவங்கியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் நகரங்களை விட்டு சொந்த ஊருக்கே சென்றுவிட்டுள்ள நிலையில் ஐடி துறையில் அடுத்த சில வருடத்தில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் எனத் தெரிகிறது.
ஹெச்சிஎல் முடிவால் மதுரை மாவட்டத்தைத் தாண்டி அருகில் இருக்கும் தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் ஐடி ஊழியர்கள் இனி மதுரையிலேயே பணியாற்ற முடியும்.