இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், 2024 மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டிற்கான நிதியியல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. நாட்டின் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களில் 5வது நிறுவனமாக மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது ஹெச்சிஎல்.
ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் ரூ.3,981 கோடியாக இருந்த லாபத்தை பதிவு செய்த நிலையில், இக்காலாண்டில் 0.35% அதிகரித்து, ரூ.3,995 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் சந்தை கணிப்புகள் ரூ.4,080 கோடியாக இருந்த நிலையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது ஹெச்சிஎல்.

மேலும் வரிக்கு பிந்தைய லாப அளவீட்டில் பார்க்கும் போது, டிசம்பர் காலாண்டை ஒப்பிடும்போது மார்ச் காலாண்டில் லாபம் 8% குறைந்துள்ளது.
மார்ச் காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.28,499 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.27,059 கோடி அளவீட்டை விடவும் 5.3% அதிகமாகும்.
மேலும் முதலீட்டாளர்களை குஷிப்படுத்தும் வகையில், நிறுவனத்தின் நிர்வாக குழு 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு ரூ.18 அளிக்க பரிந்துரைத்துள்ளது. இதோடு ஈவுத்தொகை அளிப்பதற்கான பதிவு நாள் மே 7, 2024 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹெச்சிஎல் மார்ச் காலாண்டில் 2.290 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டு உள்ளது. இதில் 21 பெரிய ஒப்பந்தங்கள் அடங்கும். இதில் 13 சேவைத் துறையில், 8 மென்பொருள் துறை சார்ந்த ஒப்பந்தங்கள்.


Click it and Unblock the Notifications