நாட்டில் இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் ஓரளவுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், ஓரளவு நல்ல முறையில் செயல்பட்டு வரும் துறையில் ஐடி துறையும் ஒன்று.
இதற்கிடையில் இன்று முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 12% ஏற்றம் கண்டு, வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது.
சரி என்ன காரணம்? பல நிறுவனங்கள்? சரிவின் விளிம்பில் இருக்கும் நிலையில், ஹெச்சிஎல் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளதே என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.
வரலாற்று உச்சத்தில் ஹெச்சிஎல் பங்கு
செப்டம்பர் மாதத்துடன் முடிவடையவிருக்கும் இரண்டாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகளும் அதனையே சுட்டிக் காட்டுகின்றன. இந்த நிலையில் தான் ஹெச்சிஎல் பங்கின் விலையானது 86.75 ரூபாய் அதிகரித்து அல்லது 12.03% அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த நிறுவனப் பங்கின் விலையானது பிஎஸ்இயில் இன்று அதன் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது.
நிஃப்டி ஐடி குறியீடும் உச்சம்
முந்தைய அமர்வில் ஹெச்சிஎல் பங்கின் விலையானது 721.05 ரூபாய் என்று முடிவடைந்திருந்த நிலையில், இன்று தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமில்லாமல் 739 ரூபாயாக தொடங்கியது. இதற்கிடையில் நிஃப்டி ஐடி குறியீடும் இன்று வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது. நிஃப்டி குறியீட்டிலேயே இன்று ஹெச்சிஎல் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்ட ஒரு பங்காக உள்ளது.
என்ன காரணம்?
ஹெச்சிஎல் நிறுவனம் அதன் இரண்டாவது காலாண்டில், அதன் வருவாய் மற்றும் செயல்பாட்டு மூலதனம் அதிகரிக்கலாம் என்று கூறிய பின்னர், இந்த பங்கின் விலையானது இப்படி தாறுமாறாக ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், ஜூலை 2020ல் வழங்கப்பட்ட மதிப்பீட்டினை விட சிறப்பாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கும்
கடந்த ஜூன் காலாண்டு அறிக்கையினை இந்த நிறுவனம் வெளியிடும்போது, அடுத்து மூன்று காலாண்டுகளில் 1.5 - 2.5 சதவீதம் வருவாய் அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தது. அதோடு நடப்பு நிதியாண்டில் செயல்பாட்டு மார்ஜின் தொகையானது 19.5% - 20.5% ஆக இருக்கும் என்றும் கூறியிருந்தது.
இது குறித்து ஹெச்சிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது வளர்ச்சி 3.5 சதவீதத்திற்கும் அதிகமாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.