தமிழ்நாட்டில் முக்கிய தொழில் உற்பத்தி மையமாக தூத்துக்குடி மாவட்டம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக கப்பல் சார்ந்த தொழில்களை தொடங்க நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தூத்துக்குடிக்கு வருகை தருகின்றன.
தென்கொரியாவை சேர்ந்த உலகின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹெச்டி ஹூண்டாய் (HD Hyundai) நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி. துறைமுகம் அருகே 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் கடந்த 2025ஆம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் அதுவும் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முன் வந்தது.

இந்நிலையில் ஆந்திரா அரசு இந்த ஆலையை தங்களின் மாநிலத்திற்கு இழுக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதை ஹெச்டி ஹூண்டாய் நிறுவனமே உறுதி செய்துவிட்டது. ஏனெனில் இந்நிறுவனம் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதை, உறுதி செய்துள்ள ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம் முன்னதாக அதிகாரிகள் இதற்காக தூத்துக்குடிக்கு அனுப்பி அங்குள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்தது. இந்நிறுவனத்தின் சன்ஜுன் ஹாங் தலைமையிலான மூத்த குழுவினர், கடந்த 1ஆம் தேதி முதல் ஒரு வார காலமாக தூத்துக்குடியில் முகாமிட்டு, துறைமுக பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு, அக்குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் துறை செயலர் விஜயகுமார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் திட்டத்தை எந்த தடையுமின்றி முன்னெடுத்து செல்வதாக ஹூண்டாய் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள அறிக்கையில் , தூத்துக்குடியின் கனவு தற்போது செயலுக்கு வந்துள்ளது. ஹெச்டி ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வுகளும், விரிவான திட்ட பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என கூறியுள்ளார்.
கப்பல் கட்டும் தளம் அமைப்பதில், ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம் தனது முதன்மையான திட்டத்தை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி - இனி இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய கப்பல் கட்டும் மையம் என தனது பதிவில் கூறியுள்ளார்.தூத்துக்குடியில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவின் முக்கியமான கப்பல் வணிகம் சார்ந்த நகரமாக தூத்துக்குடி உருவெடுக்கும்.


Click it and Unblock the Notifications


