தென் கொரியாவை சேர்ந்த உலகின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனம் ஹெச்டி ஹூண்டாய் (HD Hyundai). இந்த நிறுவனம் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளத்தை தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு இந்த திட்டத்தை காக்கிநாடாவுக்கு இழுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு நடந்து வருகிறது. தங்கள் மாநிலத்திற்கு பல்வேறு முதலீடுகளை கொண்டு வருவதில் சந்திரபாபு நாயுடு அரசு மிக தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக அண்டை மாநிலங்களுக்கு வரும் நிறுவனங்களுக்கு அதிக சலுகை வழங்கி தங்கள் பக்கம் இழுக்க திட்டமிடுகிறது. அந்த வகையில் தான் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் சலுகைகளை விட அதிகப்படியான சலுகைகளையும் மானியங்களையும் வழங்குவதாக கூறி, தென் கொரிய ஹெச்டி ஹூண்டாயை தூத்துக்குடிக்கு பதில் காக்கிநாடாவில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க சொல்லி ஆந்திர அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக et infra செய்தி தெரிவிக்கிறது.

இதற்காக, Auro Infra நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு வரும் காக்கிநாடா கேட்வே போர்ட் (Kakinada Gateway Port) பகுதியில், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான நிலம் மற்றும் நீர்முகப்பு வசதிகளை ஆந்திர அரசு வழங்க முன்வந்துள்ளதாம். எச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான HD KSOE-இன் உயர் அதிகாரிகளிடம் ஆந்திர அதிகாரிகள் தரப்பில் ரகசிய பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
காக்கிநாடாவின் ஒருங்கிணைந்த துறைமுக-தொழிற்துறை சுற்றுச்சூழல் அமைப்பு ஹூண்டாயின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும் என்றும், கொரியா நாட்டின் பூசன் நகரை போல காக்கிநாடாவையும் ஒரு பெரிய கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் மையமாக மாற்ற முடியும் என்றும் காக்கிநாடா கேட்வே துறைமுக அதிகாரிகள் இந்நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அறிவுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் கூட்டணியில் இருப்பதால் எப்படியாவய்து இந்த திட்டத்தை தூத்துக்குடியில் இருந்து ஆந்திராவுக்கு கொண்டு வர முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த டிசம்பர் 2025இல் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் கீழ் ஹூண்டாய் நிறுவனம் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மத்திய அரசின் முயற்சியின் கீழ் உலகின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனம் முதன்முதலில் இந்தியாவில் தன்னுடைய தளத்தை அமைக்க வந்தது. தற்போது விஜய் தலைமையிலான அரசும் தூத்துக்குடி திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2.5 மில்லியன் முதல் 3.5 - 4 மில்லியன் Gross tonnage திறன் கொண்ட வணிக கப்பல்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தேசிய கப்பல் கட்டும் திட்டம் மூலமாகவும் தூத்துக்குடி திட்டத்திற்கு முறையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இவ்வளவு பணிகள் முடிந்த நிலையில், ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம் தனது திட்டத்தை காக்கிநாடாவுக்கு மாற்றுவது சாத்தியமில்லை என துறைசார் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆந்திர அரசு அதிக சலுகைகளை வழங்கி தீவிரமாக வற்புறுத்துவதால், ஹூண்டாய் நிறுவனம் தற்போது ஒருவித இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனம் தூத்துக்குடியிலேயே தனது திட்டத்தை தொடருமா அல்லது ஆந்திராவின் சலுகைகளால் காக்கிநாடாவுக்கு மாறுமா என்பது விரைவில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications

