தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின், சந்தை மூலதனமானது 8 டிரில்லியன் ரூபாயினை தொட்டுள்ளது.
புதன் கிழமையன்று அதன் பங்கு விலையானது 1,646 என்ற புதிய உச்சத்தினை தொட்டது. ஆக தனியார் வங்கியான இது, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் மூன்றாவது சந்தை மதிப்பினை எட்டியுள்ளது.
பிஎஸ்இ-யில் இவ்வங்கியின் பங்கு விலையானது கிட்டதட்ட 2 சதவீதம் அதிகரித்து, ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கானது புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. காலை 9.17 மணியளவில் இதன் சந்தை மூலதனம் 8.02 டிரில்லியன் ரூபாய் என்று பிஎஸ்இ தரவுகள் காட்டுகின்றன. இதனுடன் ஒப்பிடும்போது பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 0.54% அதிகரித்து 44,765 புள்ளிகளாக காணப்படுகிறது. இதுவும் இன்று அதன் புதிய உச்சத்தினை எட்டியுள்ளது.
தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 13.34 டிரில்லியன் ரூபாய் சந்தை மதிப்பினை எட்டி முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் 10.19 டிரில்லியன் ரூபாய் மதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதே மூன்றாவது இடத்தில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் 4.08 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலும், இதே இன்ஃபோசிஸ் நிறுவனம் 4.83 டிரில்லியன் ரூபாய் மதிப்பில் நான்காவது இடத்திலும் உள்ளதாக பிஎஸ்இ தரவுகள் மூலம் அறியப்படுகிறது.
கடந்த மாதத்தில் எஸ் & பி சென்செக்ஸ்-க்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கி 17% என்ற அளவில் ஏற்றம் கண்டு, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தினை கொடுத்தது. இதே காலகட்டத்தில் எஸ் & பி சென்செக்ஸ் 10% மட்டுமே ஏற்றம் கண்டது.
இதே கடந்த மூன்று மாதங்களில், தனியார் துறையை சேர்ந்த இந்த கடன் வழங்குனரின் பங்கு மதிப்பானது 30% அதிகரித்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் பெஞ்ச் மார்க் குறியீடுகள் 15% லாபத்தில் இருந்தது.
கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டின் இந்த வங்கியின வட்டி வருவாய் மற்றும் பிற வருவாய்கள் கணிசமாக வளர்ச்சி கண்டுள்ளன. இதனையடுத்து இவ்வங்கியின் நிகரலாபம் ஆண்டுக்கு 18.4% அதிகரித்து 7,513 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் இவ்வங்கியின் வட்டி வருவாய் 16.7% அதிகரித்து, 15,776 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சொத்து வளர்ச்சியும் 21.5% வளர்ச்சி கண்டுள்ளது.
இதே மொத்தம் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 1.08% ஆக சரிந்தது. இது ஒரு வருடம் முன்பு 1.38% ஆக இருந்தது. அதே போல் நிகர வாரக்கடன் விகிதமும் 0.42%ல் இருந்து 0.17% ஆக குறைந்துள்ளது. டிஜிட்டல் உட்புகுத்தல், பண்டிகை காலகட்டத்தில் வலுவான சில்லறை கடன் வளர்ச்சி ஆகியவை இந்த வங்கியின் முன்னோக்கிய வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்ததாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.