கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி விடக் கூடாது என்கிற எண்ணத்தில், மத்திய அரசு ஏப்ரல் 14 வரை லாக் டவுன் அறிவித்து இருந்தது.
இப்போது இந்த லாக் டவுன் காலம் போதாததால், பல மாநில அரசுகள் ஏப்ரல் 30 வரை லாக் டவுனை நீட்டித்து இருக்கிறது. அதோடு மத்திய அரசும் மே 03 வரை நீட்டித்து இருக்கிறது.
இதனால் பலரும் மேற்கொண்டு பல இன்னல்களுக்கு ஆளாவார்கள். ஆனால் இந்த லாக் டவுனால் வீடு வாங்க இருப்பவர்களுக்கு ஒரு நல்லது நடக்கலாம் என ஹெச் டி எஃப் சி தலைவர் சொல்லி இருக்கிறார். அப்படி என்ன சொன்னார்?
நீட்டிப்பு சரி தான்
ஹெச் டி எஃப் சி (HDFC) நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக் "இந்த லாக் டவுன் நீட்டிப்பு இந்த நேரத்தில் அவசியமான ஒன்று. அதைத் தான் அரசு செய்திருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையும் என நம்புகிறேன். நாம் இன்னும் வலுவாக வருவோம்" எனச் சொல்லி இருக்கிறார்.
கவலை வேண்டாம்
அதோடு, இந்தியா மேக்ரோ பொருளாதாரத்தை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். இந்தியாவிடம் போதுமான அந்நிய செலாவணி இருக்கிறது. அதோடு கச்சா எண்ணெய் விலை வேறு குறைவதால், நம் நடப்புக் கணக்கு உபரியாக இருக்கும். எந்த நாட்டுக்கும் இந்தியாவைப் போல, வெளிநாட்டு ரெமிட்டன்ஸ் கிடைப்பதில்லை எனவும் நல்ல விஷயங்களைச் சொல்லிவிட்டு மெல்ல ரியல் எஸ்டேட் பக்கம் திரும்புகிறார் தீபக் பரேக்.
டெவலப்பர்கள்
ரியல் எஸ்டேட் துறையில் ரெரா (RERA), ஜிஎஸ்டி என அனைக்க வேண்டிய நெருப்புகள் நிறையவே இருக்கின்றன என்பதை புரிந்து கொள்கிறேன். தங்கள் மாநிலங்களை விட்டு, மீண்டும் கட்டட வேலைகள் நடக்கும் மாநிலங்களுக்கு, கட்டட தொழிலாளர்களை அழைத்து வர ஊக்குவிக்க வேண்டி இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்.
விலை குறையும்
இந்த கொடூரமான கொரோன வைரஸால், ஒட்டு மொத்தமாக ரியல் எஸ்டெட் விலை சுமாராக 20 சதவிகிதம் வரை சரியலாம் எனச் சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார் ஹெச் டி எஃப் சி (HDFC Limited) நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக். இது ஹெச் டி எஃப் சி பேங்க் அல்ல.
மற்றவைகள்
ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (உதாரணமாக செப்டம்பர் - அக்டோபர் காலத்துக்கு) முத்திரைத் தாள் பதிவு, பதிவுக் கட்டணம் போன்றவைகளை ரத்து செய்ய வேண்டிய அவசியத்தையும் சுட்டிக் காட்டி இருக்கிறார். இவர் சொல்வதை அரசு கேட்குமா? அப்படி ஒருவேளை இந்த கட்டணங்களை எல்லாம் ரத்து செய்தால் ஓரளவுக்காவது ரியல் எஸ்டேட் வியாபாரம் தலை தூக்கலாம்.