இந்தியா முழுக்க இணைய மயமாகிக் கொண்டு இருக்கிறது. அதில் இந்திய வங்கித் துறை முன்னோடிகளாக இருந்து வருகிறார்கள்.
இன்று வங்கிக் கிளைக்கே போகாமல், நமக்கு தேவையான அனைத்து சேவைகளையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ளக் கூடிய அளவுக்கு தொழில்நுட்பத்தை புகுத்தி இருக்கிறார்கள் வங்கித் துறையினர்.
அப்படி நல்ல தொழிப்நுட்ப பின்புலம் கொண்ட வங்கிகளில் ஒன்று தான் ஹெச் டி எஃப் சி வங்கி. ஆனால் இன்றோடு சேர்த்து மூன்று நாட்களாக ஹெச் டி எஃப் சி வங்கி நெட்வோர்க் பலருக்குக் தண்ணி காட்டிக் கொண்டு இருக்கிறது.
பிரச்சனை
ஹெச் டி எஃப் சி வங்கியின் நெட் பேங்கிங் சேவையை வழக்கம் போல சரளமாக பயன்படுத்த முடியவில்லை. நெட்பேங்கிங் தவிர ஹெச் டி எஃப் சி வங்கியின் அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியவில்லை. ஹெச் டி எஃப் சி வங்கி தரப்போ சிலருக்கு தங்கள் வங்கிச் சேவை வழக்கம் போல கிடைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறது.
என்ன காட்டுகிறது
எப்போது ஹெச் டி எஃப் சி வங்கியின் நெட் பேங்கிங் சேவையை பயன்படுத்த முயன்றாலும் "Dear user, the netbanking system is busy processing heavy load from currently logged in customers, request to try after some time. Thank you for your cooperation," என்கிற செய்தியையே காட்டுகிறது. இதை லைவ் மிண்ட் செய்தி நிறுவனமும் தன் வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறது.
சம்பளம்
மாதம் பிறந்துவிட்டதால், ஹெச் டி எஃப் சி வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் எப்படி பணத்தை பரிமாற்றம் செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். கடன் இ எம் ஐ, க்ரெடிட் கார்ட் பில் போன்ற மாதாந்திர தவணைகள் மற்றும் வேலைகள் எல்லாம், ஹெச் டி எஃப் சி வங்கியின் இந்த தொழில்நுட்ப கோளாறால் தேக்கம் கண்டு இருக்கின்றன.
நேற்று
"மன்னிக்கவும், நாங்கள் எதிர்பார்த்ததை விட, தொழில்நுட்ப கோளாறுகளைச் சரி செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது. இந்த டெக்னிக்கல் சிக்கலை சரி செய்ய, எங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்" என நேற்று, ஹெச் டி எஃப் சி வங்கி தன் ட்விட்டர் பக்கத்திலேயே சொல்லி இருக்கிறார்கள்.
திங்கள்
கடந்த திங்கட்கிழமை காலை சுமார் 10 மணி அளவில், இந்த டெக்னிக்கல் கோளாறு தொடர்பான புகார்கள் எழத் தொடங்கின. இப்போது வரை அந்த டெக்னிக்கல் சிக்கல்களை முழுமையாக சரி செய்ததாகத் தெரியவில்லை. இதே போல ஒரு பெரிய டெக்னிக்கல் சிக்கல், கடந்த ஆண்டில், ஹெச் டி எஃப் சி வங்கியின் செயலியில் வந்தது நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
பங்கு விலை
ஹெச் டி எஃப் சி வங்கி பங்குகள் கடந்த நவம்பர் 29, 2019 அன்று 1,275 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் கடந்த திங்கள் முதல் இன்று வரை சுமார் 25 ரூபாய் விலை இறக்கம் கண்டு 1,250 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் தொடர்ந்து இப்படி டெக்னிக்கல் கோளாறுகள் நடக்காமல் இருந்தால் சரி. குறிப்பாக நிதித் துறையில்.