பெரும்பாலானோருக்கு ஐடி வேலை கிடைத்து விடாதா? என்ற கவலை.. ஐடி வேலையில் இருப்பவர்களுக்கோ தங்கள் சொந்த ஊருக்கு சென்று அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கவலை. அப்படித்தான் நல்ல சம்பளம் தரும் ஒரு நிலையான வேலையை உதறித் தள்ளிவிட்டு முழு நேர விவசாயியாக மாறி இருக்கிறார் ஒருவர். பெங்களூரில் புகழ்பெற்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர் தனது குடும்பத்தின் 11 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி தற்போது ஐடி துறையை விட அதிக வருமானம் பார்த்து வருகிறார்.
பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சுமார் 8 ஆண்டுகள் பணிபுரிந்தவர் சேத்தன். இவர் 2017-ஆம் ஆண்டு தனது வேலையை ரிசைன் செய்தார். அதன் பின்னர் தனது சொந்த ஊரான தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பெல்லாரேக்குத் திரும்பினார். இவருடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த குடும்பம். இதனால் தானும் ஒரு விவசாயியாக மாற வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோளாக இருந்தது.
ஆனால் சேத்தனின் இந்த முடிவுக்கு உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. குடும்பத்தில் இருந்தே கடுமையான எதிர்ப்புகள் வலுத்தது. ஏன் கிராமத்திற்கு வந்து உன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறாய்? இப்படியே செய்து கொண்டிருந்தால் உனக்கு யாரும் பெண் தர மாட்டார்கள்.. என்று சுற்றி இருந்தவர்கள் அவரை சாடினர். ஒரு சிலர் கொஞ்ச நாள் விவசாயத்தில் இருந்து விட்டு ஒரு வருடம் முடிவதற்குள் மீண்டும் ஐடி வேலைக்கு திரும்பி விடுவார் என்றும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

சேத்தன் தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. கார்ப்பரேட் வேலையில் இருந்த போதும் சேத்தனுக்கு விவசாயத்தின் மீதுதான் அதிக ஆர்வம் இருந்தது. பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது தன்னுடைய சமையல் அறையில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். அதோடு அதை அங்குள்ள உள்ளூர் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார்.
பெங்களூரில் இருந்து கொண்டே தனது ஊரில் உள்ள பண்ணையில் மஞ்சள் சாகுபடி செய்து சுமார் 3000 கிலோ மகசூல் ஈட்டினார். இதுவே அவருக்கு நம்பிக்கையை தந்தது. ஒரு சிறிய இடத்திலேயே இவ்வளவு செய்ய முடிகிறது என்றால் கண்டிப்பாக விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் யார் பேச்சையும் கேட்காமல் முழு நேர விவசாயியாக மாறினார்.
நவீன விவசாய முறை: காலம் காலமாக விவசாயிகள் கையாளும் எந்த முறையையும் சேத்தன் விரும்பவில்லை. தன்னுடைய பண்ணையை நவீனப்படுத்தி பல பயிர்களை கொண்டு விவசாயம் செய்ய விரும்பினார். அதற்காக ஆரம்பத்தில் ரூ.18 லட்சம் வரை முதலீடு செய்தார். ஏற்கனவே பாக்கு தோட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்க வெளிநாட்டு பழங்களை சாகுபடி செய்யத் தொடங்கினார்.
ரம்பூட்டான், பாக்கு மரங்கள் என ஏராளமான மரங்களைக் கொண்டு பண்ணை அமைத்தார், தற்போது அவருடைய "அவே மஞ்சன்னா ஷெட்டி ஃபேமிலி ஃபார்ம்ஸ்-இல்" 2500-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள், 650 ரம்புட்டான் மரங்கள், 300 தென்னை மரங்கள், 100க்கும் மேற்பட்ட மங்கோஸ்டீன் மரங்கள் மற்றும் 800 மிளகு கொடிகள் இருக்கின்றன. இதைத் தவிர ஜாதிக்காய், அவகேடோ, மஞ்சள் மற்றும் பிற காய்கறிகளையும் விளைவிக்கிறார்.
ரம்பூட்டான் பழத்தை கிலோ ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்து வருகிறார். மங்கோஸ்டீன் பழமும் பருவ காலங்களில் கிலோ ரூ.750 வரை விற்பனையாகிறது. ஒவ்வொரு ஆண்டும் சேத்தன் ரூ.25 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை டர்ன் ஓவர் செய்கிறார். இதில் நிகர லாபமாக ரூ.15 லட்சம் வரை கிடைக்கிறது.
ஆரம்பத்தில் சேத்தனுக்கும் பல பிரச்சனைகள் இருந்தது. இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் விவசாயத்திற்கு புதிது. 2022-ஆம் ஆண்டில் 5500 கிலோ வரை இருந்த மகசூல் 2024-ஆம் ஆண்டில் 400 கிலோவாக குறைந்தது. ஆனால் இதையெல்லாம் பார்த்து சேத்தன் மனம் தளரவில்லை. தொடர்ந்து தன்னுடைய முயற்சியை போட்டுக் கொண்டே இருந்தார்.
விளைவிப்பதோடு நிறுத்தி விடாமல் விலைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் தெரிந்து கொண்டார். மங்களூரிலிருந்து ரயில், பேருந்து மற்றும் இதர போக்குவரத்து மூலம் பெங்களூர், மும்பை, பூனே, டெல்லி, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கு தான் விளைவிக்கும் பொருட்களை அனுப்பி வைத்தார். இதுவே அவருடைய வெற்றிக்கு படிக்கல்லாய் அமைந்தது. ஊரே ஒரு விஷயத்தை எதிர்த்தாலும்.. நம்முடைய முடிவில் உறுதியாக இருந்தால் எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் சமாளிக்கலாம் என்பதற்கு சேத்தன் மிகச் சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications
