தெலுங்கு திரையுலகின் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்தவர் பிரம்மானந்தம். இவர் தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் நடித்துள்ளார். தன்னுடைய முகபாவனையைக் கொண்டே அனைவரையும் மகிழ்வித்த ஒரு கலைஞர். இவரை யாராலும் மறக்க முடியாது. தன்னுடைய கடின உழைப்பால் கோடிக்கணக்கான மக்களை ரசிகர்களாக மாற்றி இருக்கும் இவரின் ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. தான் சந்தித்த பிரச்சினைகள் குறித்து அவரே ஒரு இன்டர்வியூவில் கூறியுள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தன் குடும்பம் எவ்வளவு சிக்கலான நிலைமையில் இருந்து மீண்டு வந்தது என்பதை பகிர்ந்திருந்தார். பள்ளிப் பருவத்தில் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடன் படித்த சக மாணவர்கள் வசதியான குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததாகவும், தான் மட்டும் கிழிந்த ஆடைகளை அணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் நினைவுக்கூர்ந்தார்.
அப்போது அவர் குடும்பம் இருந்த சூழ்நிலையில் அவருடைய தந்தையால் தேவைப்படும் பாட புத்தகங்களை கூட வாங்க முடியாத சூழலே இருந்துள்ளது. அதற்காக ஒவ்வொரு ஆண்டும், அவருடைய தந்தை முன்னர் படித்த மாணவர்களிடமிருந்து பழைய புத்தகங்களை ஏற்பாடு செய்து தருவார் என்றும், இன்றைய இளைய தலைமுறைகளால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு வறுமையின் பிடியில் சிக்கி, அதிலிருந்து தானும் தன குடும்பமும் மீண்டு வந்ததாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.

லெக்சரர் டூ சினிமா ஸ்டார்: திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு பிரம்மானந்தம் ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரியில் லெக்சரராக பணியாற்றினார். அப்போதே அங்கு பாடம் நடத்துவதோடு நிறுத்தி விடாமல், கல்லூரி மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் மேடைகளில் ஏறி மிமிக்ரி செய்வது, நடித்துக் காட்டுவது போன்றவற்றையெல்லாம் செய்து வந்திருக்கிறார்.
கல்லூரிக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிய பிறகு இருக்கும் மீதி நேரங்களில் பல மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இப்படியே மக்களின் கவனத்தைப் பெற்ற பிரம்மானந்தத்தின் கலைப்பயணம் 1985-ஆம் ஆண்டு தொலைக்காட்சி துறைக்குள் அவரை நுழைய வைத்தது. பின்னர் இரண்டே ஆண்டுகளில் அதாவது 1987-ஆம் ஆண்டில் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார்.
பிரம்மானந்தத்தின் சொத்து மதிப்பு: இன்று கிட்டத்தட்ட 1000-த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார். உலகளவில் குறைந்த நடிகர்களே செய்துள்ள இந்த அரிய சாதனைக்காக அவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். 2012-ஆம் ஆண்டில் வாழும் நடிகர்களில் அதிக படங்களில் நடித்த நடிகராக மாறினார். ஆரம்பத்தில் வறுமையில் வாடிய பிரம்மானந்தத்தின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய். என பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிரம்மானந்தத்தின் சொத்து மதிப்பு, பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் சொத்து மதிப்பை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. அன்று கிழிந்த ஆடைகளுடன் பள்ளிக்குச் சென்ற ஒரு சிறுவன் இன்று இந்திய சினிமாவில் மாபெரும் ஸ்டாராக மாறி இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறார் என்றால் அவருடைய முயற்சியும் பயிற்சியுமே அதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது.


Click it and Unblock the Notifications