செமிகண்டக்டர் சிப், உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணமாக ஏப்ரல் மாதம் ஒரு ஸ்கூட்டர் கூட உற்பத்தி செய்யவில்லை என ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பற்றி எரிகிறது என செய்திகள் வந்தாலும் அதன் மீதான மோகம் மக்கள் மத்தியில் குறையவில்லை என்றே கூற வேண்டும். மார்ச் மாதம் மட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை 370 சதவீதம் அதிகரித்து 49,607 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
ரஷ்யா - உக்ரெய்ன் போர்
ரஷ்யா - உக்ரெய்ன் இடையிலான போர் இரண்டு நாட்களில் முடிவடைந்துவிடும் என தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.
செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாடு
போர் காரணமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்திக்கு முக்கிய தேவையான செமிகண்டக்டர் சிப்பிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
ஹீரோ எலக்ட்ரிக்
செமிகண்டக்டர் சிப்களுக்கு ஆர்டர் கொடுத்து 60 நாட்களாகியும் இன்னும் வரவில்லை. ஒவ்வொரு மாதமும் எங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை இரட்டிப்பாகிக் கொண்டு வருகிறது. ஆனால் இப்போது இந்த சிப் தட்டுப்பாட்டால் உற்பத்தி தடைப்பட்டு விற்பனை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஹீரோ எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
ஆனாலும் பல வாடிக்கையாளர்கள் டீலர்களிடம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புக் செய்துவிட்டுக் காத்து இருக்கின்றனர். 2022-ம் ஆண்டு 1 லட்சம் வாகனங்கங்களை விற்க வேண்டும் என ஹீரோ எலக்ட்ரிக் இலக்கு நிர்ணயித்து இருந்தது.
பேட்டரி பாதுகாப்பு மாதம்
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரியும் விபத்து செய்திகள் அதிகளவில் வர, அதற்குக் கோடைக்காலங்களில் ஏற்படும் வெப்பம் மற்றும் பேட்டரியை சரியாகப் பராமரிக்காததே காரணமாகக் கூறப்படுகிறது. அதை சரி செய்யும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு பேட்டரியை எப்படி பாதுகாப்பாகப் பராமரித்துப் பயன்படுத்துவதை விளக்கும் விதமாக பேட்டரி பாதுகாப்பு மாதத்தைக் கொண்டாடியுள்ளது ஹீரோ எலக்ட்ரிக்.
பாதுகாப்பு அம்சங்கள்
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரிவதை வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கும் விதமாக 3 அலாரம் கொண்ட பாதுகாப்பு அம்சத்தை ஹீரோ எலக்ட்ரிக் அறிமுகம் செய்துள்ளது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஓலா எலக்ட்ரிக்
ஹீரோ நிறுவனம் செமிகண்டக்டர் சிப் கிடைக்காமல் தடுமாறி வரும் நிலையில், பல சர்ச்சைகள் இருந்தாலும் ஓலா நிறுவனம் ஏப்ரல் மாதம் அதிக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய அரசு
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்ட்டரிக்கள் தரம் குறித்த விதிமுறைகளில் திருத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. தீவிபத்தில் சிக்கிய வானங்களில் பெரும்பாலானவை லித்தியம்-அயன் பேட்டரி கொண்ட ஸ்கூட்டர்கள் என்றும் கூறப்படுகிறது.