இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் தலைவரான பவன் முன்ஜாலின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்த நாளில் இருந்தே பதற்றமாக இருந்த நிலையில், நேற்று மத்திய வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையின் மூலம் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே பண்ணை வீடு, 1000 கோடி ரூபாய் போலி கணக்குகள் எனப் பல செய்துகள் வெளியாகியுள்ள நிலையில் வருமான வரித்துறை நிறுவனத்தின் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள அறிக்கை ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
ஹீரோ மோட்டோ கார்ப்
மத்திய நேரடி வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் கணக்கில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள பணப் பரிமாற்றங்கள் தனது வர்த்தகத்திற்குத் தொடர்பற்ற வகையில் உள்ளது. இந்தப் பணம் அனைத்தும் ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சேவைக்காகக் கொடுக்கப்பட்ட பணம் என குறிப்பிட்டு உள்ளது.
போலி நிறுவனங்கள்
ஆனால் ஹீரோ மோட்டோ கார்ப் நிர்வாகம் பணத்தை வெளியில் எடுப்பதற்காகப் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் வெளியில் எடுக்க முயற்சி செய்துள்ளது என வருமான வரித்துறை சந்தேகித்துள்ளது.
பவன் முன்ஜால்
மத்திய நேரடி வரித்துறை சுமார் 3 நாட்கள் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முன்ஜால் உட்படப் பல நிறுவனத்தின் அதிகாரிகளின் வீடு, அலுவலகம் என 35க்கும் அதிகமான இடத்தில் மார்ச் 23ஆம் தேதி சோதனை செய்தனர்.
மோசடிகள்
இந்நிலையில் மத்திய நேரடி வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தேடல் நடவடிக்கையின் போது, பல்வேறு மோசடிகள் செய்திருப்பதை உறுதி செய்யும் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பணப் பரிமாற்றங்கள்
மேலும் நிறுவனம் குறிப்பிடப்பட்டு உள்ள பல பணப் பரிமாற்றங்கள் வர்த்தகத்திற்காகக் காட்டப்பட்டாலும், ஆனால் அதை முழுமையாக ஆதரிக்கப்படவில்லை" என்று தனது அறிக்கையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிட்டு உள்ளது.
நகை பணம்
மேலும் வருமான வரித்துறையின் இந்தச் சோதனையில் 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளது. மேலும் 10 ஏக்கர் நிலம் வாங்கியது, அதற்காக 60 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத தொகை அளித்து, சந்தேகத்திற்குரிய கடன், போலியான செலவுகள் செய்ததற்கான கணக்குகள், பல போலி நிறுவனங்களுக்கு அதிகப்படியான பணத்தைப் பரிமாற்றம் செய்தது போன்ற பல தரவுகளை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது.
ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள்
இந்நிலையில் மார்ச் 22ஆம் தேதி ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் 2,421.30 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகள், இன்று 2.81 சதவீதம் சரிந்து 2,230.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் 6 முதல் 8 சதவீதம் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications