கொரோனா வைரஸ் பிரச்சனை வந்த பின், போக்குவரத்து, பயணம் எல்லாம் கிட்டத்தட்ட முட்டுச் சந்தில், முட்டிக் கொண்டு நிற்கிறது.
காய்கறி வாங்க வெளியே போவது, பால், மருந்து, மாத்திரை, மருத்துவமனைகளுக்கு வெளியே போவதே இன்றைய தேதிக்கு மிகப் பெரிய பயணமாக இருக்கிறது. வழக்கம் போல வாகனங்களைப் பயன்படுத்த முடியவில்லை.
இந்த லட்சணத்தில், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை எல்லாம் மரண அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் கம்பெனி ஒன்றின் நிகர லாபம் 95 % சரிந்து இருக்கிறதாம்.
ஹீரோ மோட்டோ கார்ப்
இந்திய நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் கம்பெனியின் ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. இந்த ஜூன் 2020 காலாண்டில் 95.12 % நிகர லாபம் சரிந்து இருக்கிறதாம். இது தான் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பெரிய செய்தி.
நிகர லாபம்
கடந்த ஜூன் 2019 காலாண்டில் ஹீரோ மோட்டோ கார்ப் கம்பெனியின் நிகர லாபம் 1,257 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஜூன் 2020 காலாண்டில் நிகர லாபம் வெறும் 61.31 கோடியாக சரிந்து இருக்கிறது. ஆக 95 சதவிகித நிகர லாபம் தடாலென சரிந்து இருக்கிறது.
வருவாய் டவுன்
அதே போல, ஹீரோ மோட்டோ கார்ப் கம்பெனியின் வருவாயும் பயங்கரமாக சரிந்து இருக்கிறதாம். இந்த ஜூன் 2020 காலாண்டில் வெறும் 5.29 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்று இருக்கிறார்களாம். வாகன விற்பனையும் 57 % சரிந்து இருக்கிறது. எனவே வருவாய் 62 % சரிந்து 2,971 கோடி ரூபாயாக இருக்கிறதாம்.
கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸால் தான் இந்த அளவுக்கு, ஹீரோ மோட்டோ கார்ப் கம்பெனியின் வியாபாரம் அடி வாங்கி இருக்கிறது என கம்பெனி தரப்பில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். தற்போது மே, ஜூன் மாதங்களில் மெல்ல வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.