கொரோனாவின் மத்தியில் அனுதினமும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பானது ஏற்கனவே மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்க தொடங்கியுள்ளது.
இப்படியொரு நிலையில் மீண்டும் வாகன விலையானது அதிகரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்னென்ன நிறுவனங்கள் விலையை அதிகரிக்க போகின்றன.
எவ்வளவு அதிகரிக்க போகின்றன. எப்போதிலிருந்து இந்த விலையேற்றம் அமலுக்கு வரப்போகின்றது. ஏற்கனவே எரிபொருட்கள் விலையானது மக்களைப் பாடாய் படுத்தி வருகின்றது. இந்த நிலையில் வாகன விலை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுவது, வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் விலை அதிகரிப்பு திட்டம்
சமீபத்தில் தான் பல வாகன உற்பத்தியாளர்களும், மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால் வாகன விலையை உயர்த்தினர். இந்த நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரிப்பு என்பது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு, மக்கள் கையில் பணப்புழக்கம் சரிவு, தேவை என்ற பல காரணிகள் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன.
ஹீரோ மோட்டோ கார்ப் அறிவிப்பு
முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோ கார்ப் அதன் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஜூலை 1, 2021ல் இருந்து 3,000 ரூபாய் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது மூலதன பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பினை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விலை அதிகரிப்பு அவசியம்
கமாடிட்டி பொருட்களின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை ஈடுகட்ட நிச்சயம் விலை அதிகரிப்பு என்பது அவசியமானது. எனினும் வாடிக்கையாளர்கள் மீது மொத்த தாக்கத்தினையும் திணிப்பதற்கு பதிலாக, நிறுவனம் செலவினங்களை குறைக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றது.
விலை அதிகரிப்பு எப்படியிருக்கும்?
ஆக மோட்டார் வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையானது 3,000 ரூபாய் வரையில் அதிகரிப்பு இருக்கும். இந்த அதிகரிப்பானது ஒவ்வொரு மாடல் அடிப்படையில் இருக்கும் என்றும் ஹீரோ தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் மே 24 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆலைகளிலும் உற்பத்தியினை மறுதொடக்கம் செய்தது.
லாபம் எவ்வளவு?
மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான ஹீரோ குருகிராம் மற்றும் தருஹேரா மற்றும் ஹரித்துவார் உள்ளிட்ட மூன்று ஆலைகளிலும் ஒற்றை ஷிப்ட் உற்பத்தியினை கடந்த மே 17 அன்று தொடங்கியது. இதற்கிடையில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகரலாபம் 44% அதிகரித்து, 885.28 கோடி ரூபாயாக கண்டுள்ளது.
மாருதி சுசூகியும் திட்டம்
இது விற்பனை அதிகரித்த நிலையில், வருவாய் 8,689.74 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனை போலவே மாருதி சுசூகி நடப்பு ஆண்டிலேயே இருமுறை விலை அதிகரிப்பினை செய்தது. இந்த நிலையில் மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு காரணமாக, மீண்டும் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு அதிகரிப்பு?
இந்த விலை அதிகரிப்பானது கார்களின் மாடல்களுக்கு ஏற்றவாறு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்யும் பட்சத்தில் இது இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக இருக்கும். ஏற்கனவே கடந்த முறைகளில் 1 - 6% விலை அதிகரிப்பு செய்த விலையில், இந்த முறை எவ்வளவு அதிகரிப்பு செய்யப்போகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. மொத்தத்தில் வாகன பிரியர்களுக்கு இது ஷாக் நியூஸ் தான்.