இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் இந்தியாவின் பிற நிறுவனங்களைப் போலவே எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது, அதிலும் முக்கியமான அடுத்த மாதமே புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் இனி ஓலா நிறுவனத்தின் நிலை என்ன..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் மாஸ் உற்பத்தியை இன்னும் செய்ய முடியாமல் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தடுமாறி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஆட்டோமொபைல் நிறுவனத்திற்குப் போதுமான பேட்டரி, உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் கிடைக்காமல் உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்
இந்த நிலையில் தற்போது பெரும்பாலானவை செட்டாகி-யிருக்கும் நிலையில் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது. இதன் படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் வாகன அறிமுகத்தின் மூலம் அடுத்த மாதம் EV துறையில் அதிகாரப்பூர்வமாக இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
VIDA என்னும் பிராண்டு
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் வாகனங்களை VIDA என்னும் பிராண்டின் கீழ் அக்டோபர் 7, 2022 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான அழைப்புகள் டீலர்கள், முதலீட்டாளர்களுக்கு அனுப்பட்டு உள்ளது. புதிய வாகனத்தின் அறிமுகம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 மில்லியன் டாலர் முதலீடு
2022 மார்ச் மாதம் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் எலக்ட்ரிக் வாகன பிரிவுக்காகச் சுமார் 100 மில்லியன் டாலர் அதாவது 760 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஒதுக்கியது. இந்தத் தொகை மூலம் ESG பிரிவில் சேவை அளிக்கும் 10000க்கும் அதிகமான தொழில்முனைவோர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
சித்தூர் பகுதி
மேலும் ஜெய்பூர் R&D ஹைப்-ல் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய EV வாகனம் ஆந்திராவில் சித்தூர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. EV துறைக்குள் பெரிய நிறுவனங்கள் இறங்குவது மூலம் விலை போர் உருவாகும், இதனால் வர்த்தகத்தில் பெரிய மாற்றம் உண்டாகும் என்பதால் ஓலா போன்ற சிறிய நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.