நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பில் ஹீரோ மோட்டோகார்ப் ஜனவரி 4, 2022 முதல் இந்த விலை அதிகரிப்பானது அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதெல்லாம் சரி இந்த விலையேற்றம் எவ்வளவு செய்யப்படவுள்ளது? என்ன காரணம்? ஏன் இந்த விலையேற்றம்? வாருங்கள் பார்க்கலாம்.
கடுமையான கட்டுப்பாடுகள்
பொதுவாக ஆட்டோமொபைல் துறையில் வாகன உற்பத்திற்கான மூலதன பொருட்கள் விலையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பரவி வந்த கொரோனாவின் காரணமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மட்டும் அல்ல சர்வதேச அளவிலும் பல கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
மூன்றாவது முறை விலையேற்றம்
இதன் காரணமாக விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனையால், மூலதன பொருட்கள் பற்றாக்குறை, இதனால் மிகப்பெரிய அளவிலான மூலதனபொருட்கள் விலையேற்றம் என பல காரணங்களுக்கும் மத்தியில் இந்த விலையேற்றமானது வந்துள்ளது. ஏற்கனவே ஆறுமாத இடைவெளியில் இரு முறை விலையேற்றம் செய்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
எவ்வளவு விலை ஏற்றம்
இது ஜூலை 1 முதல் எக்ஸ் ஷோரூம் விலையில் 3,000 ரூபாய் வரையில் அதன் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு உயர்த்தியது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 20ம் தேதி மீண்டும் 3,000 ரூபாய் வரையில் உயர்த்தியது. இந்த இரண்டு விலை ஏற்றத்தின் போதும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மூலதன பொருட்கள் விலையேற்றத்தினை சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
மற்ற நிறுவனங்கள் விலையேற்றம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தவிர, மஹிந்திரா & மஹிந்திரா, ரெனால்ட், டாடா மோட்டார்ஸ், ஹோண்டா கார்கள் மற்றும் டோயோட்டா போன்ற வாகன நிறுவனங்களும் விலை அதிகரிப்பினை செய்தன. இந்த வாகன நிறுவனங்களும் மூலதன பொருட்கள் விலையேற்றத்தினையே சுட்டிக் காட்டின.
எப்போது விலை குறையும்
நடப்பு ஆண்டில் கொரோனா காரணமாக மந்த நிலையில் இருந்த விற்பனைக்கும் மத்தியில், இந்த விலையேற்றமானது வந்துள்ளது.
இது குறித்து இக்ரா நிறுவனத்தின் அறிக்கையின், மூலதன பொருட்களின் விலை அதிகரிப்பு அடுத்தடுத்த விலையேற்றத்திற்கு வழிவகுத்தது. இது அடுத்த 2022ம் நிதியாண்டின் முதல் பாதியில் இன்னும் கடினமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாதியில் இது சற்றே குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பங்கு விலை நிலவரம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் இன்று 1.87% அதிகரித்து, 2392.70 ரூபாயாக முடிவுற்றுள்ளது. இதே இன்றைய உச்ச விலையானது 2403 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2352.50 ரூபாயாகும்.
இதே போல பிஎஸ்இ-ல் இப்பங்கின் விலையானது இன்று 1.85% அதிகரித்து, 2393.40 ரூபாயாக முடிவுற்றுள்ளது. இதே இன்றைய உச்ச விலையானது 2402.80 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2352.10 ரூபாயாகும்.இதன் 52 வார உச்ச விலை 3628.55 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 2310.50 ரூபாயாகும்.