இந்திய பொருளாதாரம் வளர்கிறதோ இல்லையோ, விலை வாசி மட்டும் கன்னாபின்னா என வளர்ந்து கொண்டு இருக்கிறது.
வெங்காயம் ஒரு கிலோ விலை, ரோஹித் சர்மா கணக்காக 200 ரூபாய் தொட்டுவிட்டது. முருங்கைக் காய் ஒரு கிலோ விலை விராட் கோலி சதம் போல 300 ரூபாய் தொட்டுவிட்டது. மதுரை மல்லி ஒரு கிலோ விலை 3000 ரூபாய் தொட்டு நம்மை சல்லி சல்லியாக நொறுக்கிவிட்டது.
இப்படி காய்கறிகள் தொடங்கி பூக்கள் வரை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கொலை கொடூரமாக அதிகரித்து வருகிறது. இதற்கு இடையில் ஏழைகளின் எண்டீவர் கார்களாக இருக்கும்... இரு சக்கர வாகனங்களின் விலையும் அதிகரித்து இருக்கின்றன.
வாங்கும் மாத சம்பளத்தில் முக்கி முனகி சேமித்து வைத்து இரு சக்கர வாகனத்தை வாங்குவோம் அல்லது வங்கி மேனேஜர்களிடம் எல்லாம் பேசி அடித்துப் பிடித்து வாங்கும் அந்த டூவீலர் தானே நடுத்தர மக்களின் சொர்க்கம். அந்த டூவீலர் தான் நம்மைப் போன்ற மிடிஸ் க்ளாஸ் சம்பள ஏழைகளின் ஆடி, பிஎம்டபிள்யூ, ஃபெராரி எல்லாம்.
இப்போது அந்த டூவீலர்களின் விலையையும் அதிகரித்துவிட்டார்களாம். ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் வரும் ஜனவரி 01, 2020 முதல் தன் வாகனங்களின் விலையை அதிகரிக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் விலை, அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறது நிறுவன தரப்பு. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் குறந்தபட்சமாக 40,000 ரூபாய் முதல் 1,05,000 ரூபாய் வரை பல ரக வாகனங்களை உற்பத்தி செய்து விற்று வருகிறார்கள். ஒவ்வொரு மாடல் வாகனங்களைப் பொறுத்து விலை ஏற்றம் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
கடந்த வாரத்தில் தான், இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி தன் வாகனங்களின் விலையை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுசூகி மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனங்களைப் போல, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டொயோட்டோ, மெர்சிடஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் விலையை அதிகரிக்க ஆலோசித்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ரைட்டு... இனி டூ வீலர் வாங்குனா மாதிரித் தான்..!